Skip to main content

“தேசிய விருது குறித்து ஃபோன் வந்தப்போ நம்பாமல் கட் செய்துவிட்டேன்”- சரண்யா பொன்வண்ணன்

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

தமிழ் சினிமாவில் 'நம்ம வீட்டுப் பிள்ளை'னு சிவகார்த்திகேயனை சொன்னா, 'நம்ம வீட்டு அம்மா'னு நடிகை சரண்யாவை சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் பல விதமான தமிழக அம்மாக்களை பிரதிபலித்து ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளவர் சரண்யா பொன்வண்ணன். அவரை சந்தித்து நெடுநேரம் உரையாடினோம். உரையாடலில் தான் நடித்த படங்கள் குறித்தும் தன் மகனான நடித்த நாயகர்கள் குறித்தும் பல சுவாரசியமான, நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் தேசிய விருது வாங்கியது குறித்து பேசிய பகுதி...
 

saranya ponvannan

 

 

பொதுவாக நான் மதியம் தூங்கவே மாட்டேன், அப்படி ஒருநாள் தூங்கும்போது ஃபோன் கால் வந்தது. அதில், உங்களுக்கு சிறந்த நடிகைக்கான நேஷனல் அவார்ட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் என்றார்கள். நான் தூக்க கலக்கத்தில் இருந்ததால் முதலில் நம்பாமல், யார் நீங்க விளையாடாமல் ஃபோனை வைங்க என்று சொல்லிவிட்டேன். அதனை தொடர்ந்து இரண்டு முறை கால் வந்தது. அதற்கு நான் சரியாக பதில் கொடுக்கவில்லை. பின் எனது கணவரிடம் சொன்னேன். அவர்தான் ஒருவேளை அது நிஜமாக இருக்கப்போகிறது செக் பண்ணிக்கலாம் என்று நம்பரை விசாரித்தார். நிஜமாகவே நேஷனல் அவார்ட்க்கு தேர்வு செய்யப்பட்டிருந்தேன். நான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன் ஆனால் எனக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. அன்று இரவு ஓகே ஓகே படத்தில் நான் காணாமல் போகும் சீன் எடுத்தார்கள். அன்றைக்கு செட்டில் ஒரே ராஜ மரியாதை. அனைத்து சேனல்களை சேர்ந்தவர்களும் பேட்டி எடுப்பதற்காக நிற்கிறார்கள். ஷாட் முடித்துவிட்டு போனால் 15 பேர் பேட்டி எடுக்க நின்றார்கள் யாருக்கு கொடுக்கிறது என்றே தெரியவில்லை. கேரவனுக்குள் ஒருத்தர் பேட்டி முடிக்க அடுத்தவர் வந்து பேட்டி எடுக்க என்று இப்படிதான் இருந்தது. அன்று அப்படிதான் அந்த சீனை நடித்து முடித்தேன். வாழ்க்கையில் முதன் முறை ஒரு குயின் ஃபீலிங் இருந்தது. உதய், ராஜேஷுக்கு அவ்வளவு சந்தோஷம் நம்ம செட்டில் இருக்கும்போது எனக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்று. 
 

சார்ந்த செய்திகள்