Skip to main content

பவன் கல்யாணுக்கு சமுத்திரக்கனி வாழ்த்து 

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
samuthirakani wishes pawan kalyan

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண், 2014-ஆம் ஆண்டு ஜனசேனா என்னும் கட்சியைத் தொடங்கினார். அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்துப் போட்டியிடாமல் பிரச்சாரம் மட்டும் செய்தார். பின்பு அக்கூட்டணியிலிருந்து 2018ஆம் ஆண்டு விலகி 2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 

இந்த நிலையில் நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளடக்கிய கூட்டணியில் இடம்பெற்றிருந்தார். சட்டமன்றத் தொகுதிகளில் 21 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பவன் கல்யாண்  70279 வாக்கு வித்தியாசத்தில் முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும் அவரது கட்சி போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது. 

இதையடுத்து பவன் கல்யாணுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி, “வாழ்த்துக்கள் அண்ணா, வென்றோம். ஆந்திரா மக்களின் கனவு மெய்ப்பட்டது. பிரபஞ்சத்துக்கு நன்றி” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பவன் கல்யாணை வைத்து ‘ப்ரோ’ என்ற தலைப்பில் சமுத்திரக்கனி  ஒரு படம் எடுத்திருந்தார். இது தமிழில் அவர் இயக்கி நடித்த வினோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சமுத்திரக்கனி பிறந்தநாளை முன்னிட்டு, சாதியற்ற சமுதாயத்தை விரும்புபவர் எனக் குறிப்பிட்டு பவன் கல்யாண் தனது ஜன சேனா கட்சி தொடர்பாக வாழ்த்தியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.  

சார்ந்த செய்திகள்