Skip to main content

மிக்ஜாம் புயல் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினிகாந்த் உதவி

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
rajini helped affected people by cyclonemichaung

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பாய், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களை ரஜினிகாந்த் அனுப்பி வைத்துள்ளார். ரஜினிகாந்த் பவுண்டேஷன் மற்றும் அகில இந்திய தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இன்று ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்