Skip to main content

அவதார் படக்குழு எடுத்த யுக்தியைப் பின்பற்றும் பொன்னியின் செல்வன் டீம்

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

ps 1 will release again in few theatres

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மட்டும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் துரைமுருகன், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர். தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. 

 

இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் பட முதல் பாகத்தை வருகிற 21 ஆம் தேதி (21.04.2023) மீண்டும் வெளியிட மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மணி சாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். பொன்னியின் செல்வன் 2-வுடன் பொன்னியின் செல்வன் 1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென... அவர் பதில்..." எனக் குறிப்பிட்டு மணிரத்னம் அனுப்பிய மெசேஜை பகிர்ந்திருந்தார். அதில் "பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வருகிற 21 ஆம் தேதி சில திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என மணிரத்னம் குறிப்பிட்டுள்ளார். 

 

இதேபோல் உலகப் புகழ்பெற்ற அவதார் படத்தின் குழுவும் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பை மற்றும் அதன் தொடர்ச்சியை ரசிகர்களுக்கு நினைவூட்டும் விதமாக சில திரையரங்குகளில் முதல் பாகத்தை ரீ ரிலீஸ் செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்