Skip to main content

“பாக்யராஜ் செய்த ஒரே தவறு இது தான்” - இயக்குநர் பேரரசு

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

This is the only mistake made by Bhagyaraj - the director Perarasu

 

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் - அல் முராட் & சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை ரத்தன் லிங்கா எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர். 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலை பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். 'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு இயக்குநர் பேரரசு பேசியதில், “20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இயக்குநர் ஆவது என்பது சிரமம். சில ஆண்டுகள் உதவி இயக்குநராக இருந்து, பிறகு இணை இயக்குநராகச் சில ஆண்டுகள் பணியாற்றி வெளியே வந்து, கதை சொல்லி தயாரிப்பாளர் பிடித்து, பிறகு தான் இயக்குநராக முடியும். ஆனால், இப்போதெல்லாம் எல்லாமே அவசரக்காலம். இரண்டு ஆண்டுகளுக்குள் படம் இயக்கி விட வேண்டும் என்று இன்று இருக்கிறார்கள்.

 

ஆனால், ரத்தன் லிங்கா படிப்படியாக குறும்படம், திரைப்படம் என்று வளர்ந்துள்ளவர். அப்படி வளர்ந்து இப்போது இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அவரது குறும்பட காலத்திலேயே அவரை இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், பிரதாப் போத்தன், மதன் போன்றவர்கள் பாராட்டி இருக்கிறார்கள் . அவர் நிதானமாகத்தான் படிப்படியாக முன்னேறியுள்ளார். அவசரத்தில் எதுவும் வெற்றி பெறாது . இந்தப் படத்தில் நமக்கு நாமே துணை என்று பெண்களுக்கு கருத்து சொல்லி உள்ளார். பெண்களைக் காப்பாற்ற எந்த கதாநாயகர்களும் வர மாட்டார்கள். அவர்கள் தான் அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

 

பாக்யராஜ் எவ்வளவு நல்ல கருத்துகளை, நல்ல கதைகளைச் சொல்லியிருக்கிறார். அவர் செய்த ஒரே தவறு  முருங்கைக்காய் மேட்டரை படத்தில் வைத்தது தான். இந்த விழாவுக்கு வந்த பலரும் அதைப் பற்றி பேசும் போது அவர் செய்த பெரிய தவறு இது என்று தோன்றுகிறது. இருமல், தும்மல் போன்றது தான் காமமும் .நம்மை மீறி வந்து விடும். எனவே, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் தான் பெண்களுக்குப் பெண்களே தான் பாதுகாப்பு என்று இந்தப் படத்தில் கூறி இருக்கிறார். இந்தப் படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்" எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படத் தலைப்பு தமிழில் வையுங்கள்; தயாரிப்பாளர் கே. ராஜன் வேண்டுகோள்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

Producer K.Rajan Speech - Mugai movie function

 

முகை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். எப்போதுமே வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் பேசும் தயாரிப்பாளர் ராஜன் நிகழ்வில் கலந்துகொண்டார். 

 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசியதாவது “முகை என்பது மிக அருமையான ஒரு தமிழ் பெயர். இயக்குநரை நான் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என்று தமிழ் சமூகத்தை நான் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறேன். ஆயிரக்கணக்கான தலைப்புகள் தமிழில் கொட்டிக் கிடக்கின்றன. அதைத் தேடிக் கண்டுபிடியுங்கள். மொட்டுக்கும் மலருக்கும் இடையில் இருப்பது தான் முகை. எனக்கே இது புதிய தகவல். பலருக்கு இன்று அதன் அர்த்தம் தெரிந்துவிட்டது. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு 3 லட்ச ரூபாய் மானியம் அறிவித்தார். 

 

அவருடைய அறிவிப்புக்குப் பிறகு தொடர்ந்து படங்களுக்கு தமிழில் நல்ல பெயர்கள் வைக்கப்பட்டன. இப்போது மீண்டும் ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கின்றனர். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது உங்களுடைய இஷ்டம். ஆனால் முடிந்தவரை தமிழில் தலைப்பு வைக்க முயற்சிக்க வேண்டும். நல்ல தமிழ் பெயர் வைத்த இயக்குநரை வாழ்த்துகிறேன். தயாரிப்பாளரை வாழ்த்துகிறேன். தமிழ் படங்கள் இன்று ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இருக்கின்றன. இளம் இயக்குநர்கள் நிறைய செலவு செய்தாலும் நல்ல படங்களை இயக்குகின்றனர். இந்தப் படம் வெற்றியடையட்டும்.” என்றார்.

 

 

Next Story

“நடிகர்களின் பின்னே தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஓடுகிறார்கள்” - பழ. கருப்பையா வேதனை

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

 Pala Karuppiah Speech at license audio and Trailer launch

 

"எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" படத்தை இயக்கிய கணபதி பாலமுருகனின் அடுத்த படம் லைசென்ஸ். இப்படத்தில் நாட்டுப்புற கலைஞர் ராஜலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழ.கருப்பையா பேசியதாவது, “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்னபோது தான் நான் நடிக்கத் தயாரானேன். ஏனென்றால் பெண்களுக்காகப் போராடும் ஒரு பெண்மணியைப் பற்றிய கதை திரையில் வருவதே அபூர்வம். மேலும் கதாநாயகியாக ராஜலட்சுமி நடிக்கிறார் என்று சொன்னவுடன் நான் கொஞ்சம் வியந்து போனேன். ஏனென்றால் ஒரு தயாரிப்பாளர் ஒரு இளம் வயது கவர்ச்சியான கதாநாயகியை வைத்துத்தான் இப்படிப்பட்ட கதையை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கையை வைத்து புது கதாநாயகியைக் கொண்டு படத்தை தயாரிக்க முன்வந்ததே இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி.

 

பாடலின் வழியாகவோ, நாட்டியத்தின் வழியாகவோ, ஒரு திரைப்படத்தின் வழியாகவோ நல்ல கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். அதேபோல் இந்த படத்தின் கதையின் வழியாக ஒரு நல்ல கலையை மக்களுக்கு கொண்டு செல்ல கடமைப்பட்டுள்ளோம். மேலும் இந்த இயக்குநர் கணபதி பாலமுருகன் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக இயக்கி இருந்தார். ஒரு காட்சியில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என பின்புல கதையை எடுத்துரைத்து அந்த காட்சியில் என்னை தொடர்புபடுத்திக் கொண்டு அழகாக நடிக்க காரணம் இயக்குநர் தான். என்னுடைய காட்சி நடித்து முடித்துக் கொண்டு வெளியூருக்கு செல்ல முற்படும்போது என்னை துரத்திக் கொண்டு வந்து மீதி பணத்தை செக்  வாயிலாக கொடுத்தார் தயாரிப்பாளர். 

 

மேலும் இப்போதைய சூழ்நிலையில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்  பெரிய பெரிய நடிகர்கள் பின்னால் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஓடிக் கொண்டிக்கின்றனர். ஆனால் இன்னும் சில வருடங்களுக்குப் பின்பு நீங்கள் சொல்லும் பெரிய நடிகர்கள் காணாமல் போய் விடுவார்கள். அந்த படமும் வந்த இடம் தெரியாமல் போய்விடும். ஆனால் ஒரு நல்ல கதை பற்பல ஆண்டுகளுக்கு பின்பும் காலத்தை வென்ற திரைப்படமாக இயங்கும். அந்த வகையில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்த லைசென்ஸ் திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.