Skip to main content

என் லாக்டவுன் தினங்களை நிறைத்த பாடல் வரிகள்... பகிர்கிறார் பாடலாசிரியர் வேல்முருகன்

Published on 26/04/2020 | Edited on 26/04/2020


கவிஞர் நா.முத்துக்குமாரின் உதவியாளர், ‘நேரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காதல் என்னுள்ளே வந்த நேரம்' என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக அறியப்பட்டவர், தொடர்ந்து ’ரிச்சி’, ’ஒரு கிடாயின் கருணை மனு’, ’பாடம்’, ’பட்டிணப்பாக்கம்’ போன்ற படங்களுக்குப் பாடல்களும், சித்தார்த் நடித்த ’எனக்குள் ஒருவன்’ என்ற திரைப்படத்திற்கு வசனமும் எழுதியவர் வேல்முருகன். மேலும் பல படங்களுக்கு பாடல்கள் எழுதிக்கொண்டே இயக்குநர் விஜயிடம் உதவி இயக்குநராக ’தலைவி’ திரைப்படத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கிறார். சென்னையில் லாக்-டவுன் தினங்களை பாடல்களோடும் புத்தகங்களோடும் கழிக்கும் அவரிடம் பேசினோம்...


இந்தத் தனிமைக்கு நீங்கள் துணையாக்கிக்கொண்ட பாடல்கள்...?

'கற்றது தமிழ்’திரைப்படத்திலிருக்கும் அனைத்து பாடல்களும் பிடித்தாலும், 'பற பற பற பற பட்டாம்பூச்சி.. தொட தொட தொட பல வண்ணாமாச்சி..' என்ற பாடலில்

'கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கிக்கிடக்குதே.. 
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இலை படகு ஆனதே..'

என்ற வரியும் அதற்கான சந்தமும் எப்போது கேட்டாலும் ஏதோ செய்யும். 'கண்மூடித் திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போலே... அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே..' என்ற பாடலை முதன்முதலில் சென்னை பண்பலை ஒன்றில் ஓரிரவு கேட்க நேர்ந்ததிலிருந்து இன்றுவரை அப்பாடல் எப்போதும் கேட்கக் கூடியதாக இருக்கிறது.
 

 

tamil ma



சிலம்பாட்டம் திரைப்படத்தில், 'மச்சான் மச்சான் உம்மேல ஆச வச்சான்...' என்ற பாடலில்,
 

http://onelink.to/nknapp


'சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும் வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குமே...' என்ற வரிகளும், தரமணி திரைப்படத்தில் 'பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம்...' என்ற பாடலில்

’உறக்கம் இல்லை இரக்கம் காட்டு...
இல்லை என் வலிகளை ஆற்று..’

என்ற வரிகளைக் கடக்கும் போதும் நெஞ்சு குறுகுறுக்கும்.

'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படப் பாடலான ’முதல்முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்’ என்ற பாடலைக் கேட்கும்போது நமக்குப் பிடித்த பெண் நம் தலைமுடிக்குள் மெல்ல பத்து விரல்களை நுழைத்து மெதுவாக ஊடுறுவி உடலின் பூனைரோமங்களை சிலிர்த்தெழ வைத்துவிட்டு அப்படியே மூளைக்குள்ளே விரல்கள் நுழைத்து விட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் அந்த இசையும் குரலும் வரிகளும்.

‘நிறம் மாறாத பூக்கள்' திரைப்படத்தில் வரும் 'ஆயிரம் மலர்களே மலருங்கள்’ என்ற உயிரை உருக்கும் பாடலில் ’நீயாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ’ என்ற வரி வரும்போது கண்ணீர் வரும். இது என்னுடைய தினசரிகளில் இடம்பிடித்துவிடும். 'கவிக்குயில்' திரைப்படத்தில் இடம்பெற்ற ’குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்' என்ற பாடலை, அதுவும் சரணத்தைக் கேட்கும் போது பெரும்துன்பம் பெருகும். ஆனாலும் அந்தத் துன்பம் பிடித்திருக்கிறது. ’உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தில்இடம்பெற்ற ’அழகிய கண்ணே’ பாடலில்,

’என் வீட்டில் என்றும் சந்திரோதயம்... நான் கண்டேன் வெள்ளி நிலா...’, 

’என் நெஞ்சம் என்றும் கண்ணாடிதான்... என் தெய்வம் மாங்கல்யம்தான்...’, 

‘நம் வீட்டில் என்றும் அலை மோதுது... என் நெஞ்சம் அலையாதது...’

ஆகிய வரிகளையும் அந்த இசைத் துணுக்குகளையும் கேட்கும்போது ஏகாந்தவெளியில் தள்ளிவிட்டதைப் போன்று உணர்வேன்.

’என் ஜீவன்பாடுது’ என்ற படத்தின் பாடலான ’எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்னுயிரில் கலந்தே அது பாடும்...’ என்ற பாடலில்

’வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும்... 
தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் கீதம்தந்தாலும்... 
நீயின்றி ஏது வசந்தமிங்கே... நீயின்றி ஏது ஜீவனிங்கே...'
 

என்ற வரிகளும் இசையும் குரலும் கடைசியில் ‘காதலின் உயிரைத் தேடி வந்து கலந்திட வா என் ஜீவனிலே...' என்று முடியும்போது ஒரு காதல் எப்படி காதலிக்கப்பட்டிருக்கிறது என்று மனத்திரையில் படமாக ஓடும்.

அசுரன் படப் பாடலான ’எள்ளு வய பூக்களையே’ என்ற பாடலும் ’சைக்கோ’ படத்திலுள்ள ‘உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா...' என்ற பாடலும் கடந்த ஆறு மாதங்களில் ரொம்பவும் பிடித்துப்போன பாடலாக அமைந்தது. மைசூரிலிருந்து ஹைதராபாத் போகும் ஒன்றரை மணி நேர வானூர்திப் பயணம் முழுக்க ’உன்ன நெனச்சு நெனச்சு’ என்ற ஒரு பாடலே போதுமானதாக இருந்தது.

நீங்கள் எழுதிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடல்கள், வரிகள்... எவை? ஏன்?

தமிழ்த் திரையிசைப்பாடல் ரசிகர்களிடம் என்னைக் கொண்டு சேர்த்த பாடல் 'நேரம்' திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காதல் என்னுள்ளே வந்த நேரம்’ என்ற பாடல்தான். என்னை பொறுத்தவரை காதலின் முக்கிய விதி, பயன்பாட்டில் உள்ள அனுபவம், காதலி எதைச் சொன்னாலும் தலையாட்டிவிட்டுப் போகணும் என்பதுதான்.
 

http://onelink.to/nknapp

 

neram



'அர்த்தமில்லா வீணான வார்த்தைகளை நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்' என்ற வரியை எழுதி அதற்கு நியாயம் சேர்த்தேன். அதேபோன்று காதல் யாரிடமும் முன் அனுமதி பெற்று வருவதில்லை என்பதினை, 'என் வீட்டைத் திடலாக்கி விளையாடும் பறவை போல் மனதினுள்ளே வந்தாடுவதாரோ?' என்ற வரியின் மூலம் தெரியப்படுத்தினேன். என்னைப் போலவே நிறைய ரசிகர்களுக்குப் இப்பாடல் வரிகள் பிடித்திருப்பதாக சொன்னார்கள். அடுத்து ’ரிச்சி’ திரைப்படத்தில் ஒரு பாட்டு. கதாநாயகன் காதல் பித்தேறி ஒரு பெண்ணின் பின்னால் சுற்றுகிறான். அவனைப் பார்த்து, ஊரில் நாலு பேர் நாலுவிதமாக பேசுகிறார்கள் என்று இயக்குநர் சொல்ல,

'சொல்லத்தான் நெனைக்கிறானே
சொல்லாமல் நடக்குறானே
யாரென்ன சொன்னாலும் பல்லத்தான் காட்டுறானேடா..?'

என்று எழுதினேன். அதே பாடலில் 

'சிறகா காதலும் இறகா அதுவொரு சருகா நான் கேட்கிறேன்?' என்று ஒருவர் கேட்க, 'சிறைதான் அதுவொரு இரைதான் அனுபவ முறைதான் நான் வாழ்கிறேன்!' என்று வேறொருவர் பதில் சொல்லுவார். இப்படி அந்த பாடல் முழுக்க ஒரு மூனாவது மனுசன் காதலிப்பவனைப் பார்த்து பாடுவது போலவே இருக்கும். அதே திரைப்படத்தில் மகன் சிறுவயதில் ஒரு குற்றத்தை செய்துவிட்டு ஊரைவிட்டு ஓடியிருப்பான். அவன் இப்போது வளர்ந்து பெரியவனாகியிருந்தாலும் இன்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். ஒரு நாள் தனது அம்மாவை தேடி சொந்த ஊருக்குவருகிறான்.

பாடல் இப்படி ஆரம்பிக்கிறது... 

’தாயைத் தேடி வாசல் பார்த்து நானும் வரும் இந்த நேரம்..
என்னை நீயும் யாரோ என்றே பார்த்திடாதே அது சாபம்!'

தொடர்ந்து...

'உயிரை உணவாக்கி எனக்கு நீ ஊட்ட வாசல் தாண்டி தெருவிலும்..
எங்கும் தேடிதான் நானும் இல்லாம போனேனே நெனச்சி அழுதியா... 
நெஞ்சோடுதான் நெறைய நான் தந்தேனே வலியை.. 
இன்னோர் வாய்ப்பும்தான் தந்தால்நானும்தான் வாழ்வேன் 
நாளும் நல்ல மகனாய் உனக்கே..'

என்று வேண்டிக்கொண்டே வருகிறான். அவன் நினைத்தது போலவே அம்மாவிற்கு அவனை அடையாளம் தெரியவில்லை. அந்த இடத்தில் 'உதறுதே எந்தன் கால்களும் அதை உணருதா உந்தன் கண்களும்.. என் சொந்த தாயே..' என்று முடித்தபோது, அம்மா தன்னோட பிள்ளைதான் என்று கண்டுகொண்டு கட்டிப்பிடித்துக்கொண்டு கதறுகிறார். இந்த வரிகளைக் கேட்டுவிட்டு இயக்குநர் முதல் உதவி இயக்குநர்கள் வரை அனைவரும் கைதட்டி வாழ்த்தினார்கள்.
 

நமது தாத்தாபாட்டி காலத்தில் ஒரு பெண்ணை ஒரு ஆணுக்குப் பேசி முடித்து கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்றால்,பெண் வீட்டுக்கு நடந்து நடந்து குறைந்தது ஏழு ஜோடி செருப்பாவது தேய்ந்துவிடுமாம். எனது கிராமத்தில் வயதானவர்கள் சொல்ல கேட்டிருக்கேன். ’ஒரு கிடாயின்கருணை மனு’ திரைப்படத்தில் கதாநாயகன் கல்யாணம் செய்து முடிக்க முப்பதைந்து வயதாகிவிடுகிறது. அவ்வளவு வயதாகி கல்யாணம் முடிந்தும் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டதால் சிறைக்கு செல்லும்படியாக ஆகிவிடுகிறது என்று இயக்குநர் கதையை சொன்னார். திருமணம் முடிந்ததும்  மனைவிக்கு கணவன் ஒரு நம்பிக்கை தரும்படியானபாடலாக இருக்க வேண்டுமென்றார். முப்பத்தைந்து வயது வரையிலும் தனியாக கெடந்தவன கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்த புதுப்பொண்ணுக்கு ஆறுதலாகவும் அன்பாகவும் இப்படி எழுதினேன்.

'தனியா கெடந்தேன் இதுவரையிலும் நானாக.. 
துணையா கெடச்சா குடியிருக்குற வீடாக..’

என்று தொகையறாவில் சொல்லிவிட்டு, ஊதாரித்தனமா சுத்திக்கிட்டு இருந்தவனை நம்பி வந்திருக்குற உன்னை எவ்வளவு பாடினாலும் தகும் என்றெண்ணி

'நான் கெட்டக் கேடு வந்தா இந்த ஆடு...
நெடுநாளாக ஏங்கி நான் தனிமையில் படுத்திருந்தேன்...'

என்று  பல்லவியை எழுதினேன். அதே பாடலில்,

'உன் கையை நான் புடிக்க ஏழு செருப்பு தேய்ஞ்சதே..
என் உசுரும் தேயும்தான் அதுநாள் வரை...
உனை நான் தாங்கிருப்பேன்…'

என்று அந்த கணவன் தன் மனைவிக்கு ஓர் உறுதிமொழியை சொல்வதாக எழுதிக் கொடுத்தேன்.
 

lyricist velmurugan

வேல்முருகன்
 

http://onelink.to/nknapp



நம்மில் பலர் கடன் வாங்கிவிட்டு துன்பப்பட்டிருப்போம். அதுவொரு கொடும் சொப்பனம் போன்று தூங்கவிடாமல் துரத்திக்கொண்டே வரும். கதாநாயகனும் கடனை வாங்கிவிட்டு கஷ்டத்தை அனுபவிக்கிறான். ஒரு வழியாக கடனை அடைத்துவிட்டு அப்பாடா என்று கொஞ்சம் ஆசுவாசம் அடைகிறான்... என்று ’பட்டினப்பாக்கம்’ படத்திற்கான பாட்டின் சூழலைச் சொன்னார் இயக்குநர். 'நேரம்தான் வந்ததே அதுவா என்னோடுதான் கொண்டாடு..' என்ற பாடலை எழுதினேன். அதில் ’தூக்கமும் போனதே கடனும்வந்த நாளாக.. தூங்க வேணும் நானும் இந்த இரவில் பெண்ணோடு..’ என்று எழுதிக்கொடுத்தேன். இயக்குநர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு எப்படி என்று கேட்டார். ’எங்கே நிம்மதி எங்கே நிம்மதி’ என்ற பாடலில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 'மனிதர்கள் யாரும் இல்லாத இடத்தில் எனக்கோர் இடம் வேண்டுமெ'ன்று பாடல் முழுக்க கேட்டுவிட்டு கடைசியில், ’என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே... இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே’ என்று கேட்டிருப்பார். மனிதர்களே இல்லாத இடத்தில் கூட ஒரு ஆண் அமைதியாக உறங்கவேண்டுமென்றால் ஒரு பெண் இருக்க வேண்டும், அப்போதுதான் அமைதியாக உறங்க முடியும் என்று அவர் அனுபவத்தைச் சொல்லியிருக்கார். ஒரு பெண்ணால்தான் ஒரு ஆணுக்கு அமைதியைக் கொடுக்க  முடியும். அதுதான் என் விருப்பமும் என்று இயக்குநருக்கு எடுத்தியம்பினேன். என் பதில் பிடித்துப்போனதாலோ என்னவோ என்னையும் படத்தில் ஒரு சில காட்சிகளில் வரும்படியான பத்திரிகை ரிப்போர்ட்டராக நடிக்க வைத்துவிட்டார்.

இன்னும் இருக்கின்றன மறக்க முடியாத வரிகளும் வார்த்தைகளும்.
 

பேட்டியின் இன்னொரு பகுதி...

"நா.முத்துக்குமாரின் உதவியாளன் என்ற தகுதிக்காகவே விஜய் சார் என்னை சேர்த்துக்கொண்டார்!" - பாடலாசிரியர் வேல்முருகன்

 

 

சார்ந்த செய்திகள்