Skip to main content

தி கேரளா ஸ்டோரி விவகாரம் - தமிழ்நாடு, மேற்கு வங்கத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

the kerala story movie issue  Supreme Court Notice to Tamil Nadu, West Bengal

 

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியான பிறகு மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இப்படத்தை திரையிடத் தடை விதிக்கக் கோரி பலரும் கூறி வந்தனர். 

 

முன்னதாக இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இப்படத்திற்குத் தடைவிதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வந்தபோது வரும் 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

 

இதனிடையே தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் கடந்த 7 ஆம் தேதி மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இப்படத்தை திரையிடத் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 8 ஆம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தமிழ்நாட்டில் படத்தை திரையிட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரியும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாட்டின் பிற பகுதிகளில் வெளியிடப்பட்ட போது மேற்கு வங்கம் வேறுபட்டதல்ல என்று கூறியது. மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுக்கு விளக்கமளித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருகிற 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்