Skip to main content

“அமீர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் காயப்படுத்தியது” - மௌனம் கலைத்த ஞானவேல் ராஜா

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

ke gnanavel raja about ameer paruthiveeran issue

 

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து கரு. பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோரும் ஞானவேல் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 

 

இப்படி தொடர்ந்து திரைப் பிரபலங்கள் இந்த விவகாரம் தொடர்பாக பேசி வந்த நிலையில், ஞானவேல் ராஜா மௌனம் காத்து வந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பருத்தி வீரன்' பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்