
கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களோடு அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், நடிகருமான சிவக்குமார் மற்றும் அவரது மகனான நடிகர் கார்த்தி இருவரும் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய கார்த்தி, “பள்ளி வளாகத்திற்குள் வந்த போது, இங்கு தான அப்பாவும் நடந்து வந்திருப்பார் என தோன்றியது” என சற்று கண்கலங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “என் அத்தையை படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் இந்த ஸ்கூலில் மகளிர் கல்வி நிலையம் இருக்கு” என்ற அவர் தனது சார்பில் 5 லட்சம் ரூபாய் நன்கொடை தர ஆசைப்படுவதாக தெரிவித்தார்.
கார்த்தி நன்கொடை அறிவித்த போது மேடையில் அமர்ந்திருந்த சிவக்குமார் திடீரென எழுந்து கார்த்தியை நோக்கி சென்று கட்டி அணைத்துப் பாராட்டினார். சிவக்குமாரின் இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைச் செய்தது.