Skip to main content

“இந்தியாவை தமிழன் ஆளும் நாள் ஏன் வரக்கூடாது..” - கமல்ஹாசன்

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Kamal Haasan question Why shouldn't the day come when Tamils ​​rule India

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுப் போனது. பின்னர் மீண்டும் படப்பிடிப்பு நடந்து வந்தது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் இப்போது மறைந்து விட்டனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகப் பேசப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது.

மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் படத்தின் புரொமோஷன் பணிகளில் ஷங்கரும் கமல்ஹாசனும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் ‘பாரா’, இரண்டாம் பாடலாக ‘நீலோற்பம்’ உள்ளிட்ட பாடல்கள், லிரிக் வீடியோவுடன் சமீபத்தில் வெளியனது.

இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், “சிக்கலில் மாட்டி இந்தியன் 2 திரைப்படம் இரண்டு, மூன்று வருடங்களாக நகராமல் இருந்தபோது, அமைச்சர் உதயநிதி உதவியால் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த உதயநிதிக்கு மக்கள் வேறு பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள்; அந்த பொறுப்பில் அவர் வெற்றிபெற வேண்டும். அவங்களுக்கு அவர் உறுதுணையாக இருந்ததுபோல், அவரோடு நாங்களும் உறுதுணையாக நிற்க வேண்டிய சூழல் வரும்.

நான் தமிழன், இந்தியன். இந்தியாவை தமிழன் ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்து காட்டுவோம். என்னை போன்ற பகுத்தறிவுவாதிகளுக்கு கடவுள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் இல்லாமல் இருக்க முடியாது. அன்புதான் உசத்தி. எனக்கு தற்பெருமை பிடிக்காது. தற்படம்(செல்ஃபி) எடுப்பதும் பிடிக்காது” எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியன் தாத்தாவின் அடுத்த புகைப்படமும் வெளியிடப்பட்டது.

சார்ந்த செய்திகள்