Skip to main content

"இனிய நண்பரை இழந்து விட்டேன்" - சுப்பு ஆறுமுகம் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

Kamal Haasan condoles the paased away of Villisai Vender Subbu Arumugam

 

பிரபல வில்லிசைப் பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம்(93) வயது முதிர்வு காரணமாக இன்று (10.10.2022) காலமானார். வில்லிசை வேந்தர் எனப் போற்றப்படும் இவர்  கடந்த 2005- ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதும், 2021- ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் வாங்கியுள்ளார். இவரது மறைவையொட்டி பல முன்னணி திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நல்லிசை பாடும் வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் மறைந்துற்றார். எப்போதும் சிரித்த முகம் சிரிக்க வைப்பதை நிறுத்திக்கொண்டது. கலைவாணர் பரம்பரையின் இறுதி நிழல் இவர்தான். கவிஞர் பாடலாசிரியர் கதாசிரியர் வில்லிசைக் கலைஞர் என்ற பன்முகம்கொண்ட நன்முகம் அடங்கிவிட்டது. குடும்பத்தார்க்கும் கலை நண்பர்களுக்கும் நெல்லை மண்ணுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார். 

 

மேலும் கமல்ஹாசனும் சரத்குமாரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கமல், "வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் கலைவாணர் என்.எஸ்.கே கண்டெடுத்த இசைவாணர். வில்லுப்பாட்டு கலையை வளர்ப்பதிலேயே வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். அதில் பல புதுமைகளைப் புகுத்தி வில்லடியை வெகுமக்களுக்கும் கொண்டுசேர்த்தவர். அபாரமான நகைச்சுவை எழுத்தாளரும் கூட. இனிய நண்பரை இழந்து விட்டேன். என் அஞ்சலி" என குறிப்பிட்டுள்ளார். 

 

சரத்குமார், "புகழ்பெற்ற வில்லிசைப்பாட்டு கலைஞர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் அவர்கள், வயது முதிர்வால் மறைந்த தகவல் வருத்தமளிக்கிறது. நகைச்சுவை நாயகன் நாகேஷ் அவர்களுக்கு 60 படங்களுக்கு மேல் நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளார் என்பதிலிருந்து அன்னாரின் நகைச்சுவை நயத்தை வியந்து பார்க்காமல் இருக்க இயலாது. அன்னாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல். ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உறையவைக்கும் காட்சிகள்” - பிரபலங்களின் பாராட்டில் ஆடுஜீவிதம் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
maniratnam kamal praised aadujeevitham movie

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடுஜீவிதம்’ நாவலை, அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஆடு மேய்க்கும் தொழிலாளியாகச் சேர்கிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலியை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது. 

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகின்ற 28 ஆம் தேதி இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரையிடலுக்கு பின் பலரும் படக்குழுவை பாராட்டிய நிலையில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். 

கமல்ஹாசன் கூறுகையில், “இயக்குநர் பிளெஸ்ஸிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உண்மையாகவே கடின உழைப்பை கொடுத்துள்ளார். கேமராமேனும் சிரமப்பட்டுள்ளார். படக்குழு இவ்வளவு தூரம் செல்வார்கள் என நினைக்கவில்லை. சிறந்த படம் என படமெடுப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை மக்களும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்றார். மணிரத்னம், பேசுகையில், “உறையவைக்கும் காட்சிகள். ப்ரித்விராஜ் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மொத்த படக்குழுவும் தான். எப்படி இப்படத்தை உருவாக்கினார்கள் என தெரியவில்லை. அவர்கள் மீது பொறாமை கொள்ளவில்லை. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்றார். 

Next Story

‘சண்டை, பிரிவு, அன்பு’ - லோகேஷ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Lokesh Kanagaraj, Shruti Haasan inimel song released

கமலின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் இசையில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘இனிமேல்’. இப்பாடலுக்கு கமல் வரிகள் எழுதியிருக்கும் நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். துவர்கேஷ் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்தின் டீசர் கடந்த 21ஆம் தேதி வெளியானது. 

டீசரில் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் ரொமான்ஸில் இருக்கும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றது. இந்த டீசர் சமூக வலைத்தலங்களில் வைரலானது. மேலும் இருவரும் இணைந்து புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தனர். இன்று மாலை 4 மணிக்கு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி தற்போது இனிமேல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இருவரும் அறிமுகமாவதில் தொடங்கி, காதலர்களாக மாறி திருமணம் வரை சென்று, பின்பு சண்டை, பிரிவு, அன்பு என அனைத்தும் கலந்து சொல்லப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.