Skip to main content

"என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்" - கமல் இரங்கல்

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

kamal condolences post about sarathbabu passed away

 

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'பட்டினப்பிரவேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

 

சமீபத்தில் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பின்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இத்தகவலுக்கு விளக்கமளித்த அவரது குடும்பத்தினர் உடல்நிலை தேறி வருவதாக கூறினர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு தற்போது உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் கமல்ஹாசன், "சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி" என குறிப்பிட்டுள்ளார்.

 

சரத்பாபு, நினைத்தாலே இனிக்கும்(1979), ஆளவந்தான், நிழல் நிஜமாகிறது, சலங்கை ஒலி, சட்டம் உள்ளிட்ட கமல்ஹாசன் படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்