Skip to main content

"கே.பி. சுந்தராம்பாளை அப்படியே விட்டா என் பெயரைக் கெடுத்திடுவா..." கிட்டப்பா பாகவதர் எடுத்த அதிரடி முடிவு!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

Kalaignanam

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், கிட்டப்பா பாகவதருக்கும் கே.பி. சுந்தராம்பாளுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது எப்படி என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

“அந்தக் காலத்தில் இந்தியாவில் இருந்து சிலோனுக்கும், சிலோனிலிருந்து இந்தியாவிற்கும் நினைத்த நேரத்திற்குச் சென்று வரலாம். விசா போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. அந்தச் சமயத்தில் இலங்கையில் வள்ளி திருமண நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில், கிட்டப்பா பாகவதர் நடிக்க இருந்தார். அந்தக் காலத்தில் கிட்டப்பா பாகவதர் பாடி நடிக்கிறார் என்றால் மக்கள் கூட்டம் பெரிய அளவில் திரண்டு வரும். தென்காசியைச் சேர்ந்த அவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த நாடகத்தைப் போட்டி நாடகமாகத் திட்டமிட்டிருந்தனர். வள்ளியைத் திருமணம் செய்துகொள்வதற்காக முருகன் வருகிறார். குறவர் வீட்டில் பிறந்த பெண்ணான வள்ளி, திருமணம் செய்தால் முருகனைத்தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருக்கிறார். வள்ளியை சோதிப்பதற்காக வேடன் வேடத்தில் முருகன் கிளம்பி வருகிறார். கையில் வில்லுடன் வந்த முருகனை வள்ளி நிறுத்துகிறார். ‘ஏன் எங்க இடத்திற்குள் வந்த’ என வள்ளி கேட்க, ‘எனக்கு சொந்தமான மான் ஒன்று இந்தப் பக்கம் ஓடிவந்துவிட்டது’ என முருகன் கூறுகிறார். அப்போது, 'காயாத கானகத்திலே... நின்று உலாவும் நற்காரிகையே...’ எனப் பாடல் தொடங்கும். அந்தப் பாடலுக்காகவே வள்ளி திருமணம் நாடகம் ஆயிரம் நாட்களைத் தாண்டி ஓடியிருக்கிறது. பின்பு, திரைப்படமாக வெளிவந்தபோதும் அந்தப் பாடலுக்காகவே மக்கள் கூட்டம் அலைமோதியது. பின்பு வள்ளி, ‘உன் மானுக்கு என்ன அடையாளம்’ எனக் கேட்பார். அதற்கு முருகன், 'மேயாத மான் புல் மேயாத மான்... சாயாத கொம்பு ரெண்டு இருந்தாலும் நிமிர்ந்து பாயாத மான்..." என்று கூறுவார். வந்திருப்பது முருகன் எனத் தெரியாமல் போடா வாடா என்று வள்ளி திட்டுவார். உடனே, அங்கிருந்து முருகன் கிளம்பிவிடுவார்.

 

பின், வயதான முதியவர் தோற்றத்தில் வருவார். மீண்டும் வள்ளியிடம் சென்று ‘எனக்குப் பசிக்குது ஏதாவது சாப்பிட கொடுக்க முடியுமா’ என்பார். வயதானவர் எனப் பரிதாபப்பட்டு தேனும் தினை மாவும் வள்ளி கொடுப்பார். அதை வாங்கிவிட்டு ‘நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிடட்டுமா’ என முருகன் கேட்பார். உடனே கடுப்பான வள்ளி, 'மோசக்கார வேஷம் கொண்ட மூடக்கிழவா போடா...' எனத் திட்டுவார். பதிலுக்கு, 'தாடி நரைத்தால் என்ன மீசை நரைத்தால் என்ன ஆசை நரைக்கலடி...' என முருகன் பாடுவார். இப்படி மாறிமாறி இருவரும் பாடுவார்கள். சிலோனில் நடந்த போட்டி நாடகத்தில் யார் இப்படி பாடி ஜெயிக்கிறார்களோ அவருக்கு ஒரு தங்க முலாம் பூசப்பட்ட கோப்பை பரிசு என அறிவித்தார்கள். பல பேர் கிட்டப்பா பாகவதருடன் போட்டிபோட்டு தோற்றுவிட்டார்கள். அந்தச் சமயத்திலேயே பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்ற உணர்வு மக்களிடம் இருந்தது. ஒரு பிராமணர் இங்குவந்து அனைவரையும் தோற்கடித்துவிடுகிறான். அவனைத் தோற்கடிக்க எதாவது தமிழ்ப்பொண்ணு கிடைக்காதா என மக்கள் தேட ஆரம்பிக்கின்றனர். தன்னை யாராலும் ஜெயிக்க முடியாது என்று நினைத்துக்கொண்டிருக்கும் இவன் கர்வத்தை எப்படியாவது உடைக்க வேண்டும் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் என்று ஒருவர் இருக்கும் விஷயம் அவர்களுக்குத் தெரியவருகிறது. உடனே சிலோனில் இருந்து நிறைய பேர் கிளம்பிவருகிறார்கள்.

 

கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாளையும் அவரது அம்மாவையும் சந்தித்து விவரத்தைக் கூறுகிறார்கள். மேலும், கிட்டப்பா பாகவதரை போட்டியில் வென்றுவிட்டால் தங்கமுலாம் பூசிய கோப்பை பரிசாகக் கிடைக்கும். அதை விற்றால் ஆயிரம் ரூபாய் அளவிற்கு விலை போகும் என்று கூறிவிட்டு கே.பி. சுந்தராம்பாளை அழைத்துச் செல்வதற்காக அட்வான்ஸ் தொகையையும் அவர் அம்மாவிடம் கொடுத்துள்ளனர். அழைத்துச் செல்வதற்காக வந்தவர்களுடன் கே.பி. சுந்தராம்பாளும் அவரது அம்மாவும் கிளம்பி சிலோனுக்குச் செல்கின்றனர். மறுநாள் நாடகம் தொடங்குகிறது. கிட்டப்பா பாகவதரும் கே.பி. சுந்தரம்பாளும் நடித்துக்கொண்டே மாறிமாறி பாட ஆரம்பிக்கின்றனர். போட்டி கடுமையாக இருக்கிறது. இப்படி இருவரும் மாறிமாறி பாடியதில் மறுநாள் பொழுதே விடிந்துவிட்டது. அந்தப் போட்டிக்குத் தலைமை தாங்கிய சேர்மன், இருவருமே வென்றதாக அறிவித்துவிடுகிறார். கோப்பை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

 

அதுவரை தன்னை எதிர்த்துப் பாடியவர்கள் அனைவரையும் தோற்கடித்துப் பழகிய கிட்டப்பா பாகவதருக்கு அன்றைய இரவு தூக்கம் வரவில்லை. வழக்கத்திற்கு மாறாக கிட்டப்பா பாகவதர் இருப்பதைக் கண்டு அவரிடம் உதவியாளர் காரணத்தைக் கேட்கிறார். இந்த தோல்வியை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறிய கிட்டப்பா பாகவதர், ‘இவளை இப்படியே விட்டால் ஊர் முழுவதும் என் பெயரைக் கெடுத்துவிடுவாள். அதனால் அவளை உடனடியாக நான் திருமணம் செய்ய வேண்டும். பொண்ணும் நல்லாத்தான் இருக்கா... அவங்க வீட்டுல பேசுங்க’ எனக் கூறியுள்ளார். உடனே கிட்டப்பா பாகவதரின் ஆட்கள் கே.பி. சுந்தராம்பாள் அம்மாவிடம் சென்று பெண் கேட்கிறார்கள். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரை விட நான்குமடங்கு அதிகமான பெயரும் புகழுடன் இருந்தவர் கிட்டப்பா பாகவதர். அப்படிப்பட்ட ஒருவர் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறாரா என அவர் அம்மாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அவர் திருமணத்திற்கு உடனே சம்மதித்துவிடுகிறார். அதன் பிறகு, கே.பி. சுந்தராம்பாளுக்கும் கிட்டப்பா பாகவதருக்கு திருமணம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்