தனுஷ், தமிழ் சினிமாவை தாண்டி இந்தியில் நடித்து தற்போது ஹாலிவுட் சினிமாவில் கால் பதித்துள்ளார். ஆரம்பக் காலகட்டத்தில் இவர் நடிக்க வந்த போது 'ஹீரோவுக்கு உண்டான உடல் கட்டமைப்பு இல்லை' என பலரும் இவரை விமர்சித்து வந்தனர். ஆனால் அவற்றையெல்லாம் உடைத்து இன்று தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் தன் வெற்றியை பதித்துள்ளார். சிறந்த நடிப்பிற்காக இரண்டு முறை தேசிய விருது வாங்கிய இவர் சினிமாத்துறையில் 20 ஆண்டுகளை கடந்துள்ளார். இவரது பணிகளை பாராட்டி ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் தனுஷிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தனுஷ் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "நான் சினிமா துறைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன என்று என்னால் நம்ம முடியவில்லை .நேரம் சீக்கிரம் கடந்துவிட்டது. நான் 'துள்ளுவதோ இளமை' படம் தொடங்கும் போது இந்த இடத்திற்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. கடவுள் கருணை உள்ளவர். என் ரசிகர்களின் தொடர் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி சொன்னால் போதாது. அவர்கள் தான் என் மிக பெரிய பலமே. பத்திரிக்கை, ஊடகம் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தருணத்தில் நான் பணியாற்றிய பணியாற்றிக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், துணை நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி. என்னுடைய குரு என் அண்ணன் செல்வராகவனுக்கு நன்றி. ஏன் என்று உங்களுக்கு தெரியும்.எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் எனக் கண்டுபிடித்த எனது அப்பா கஸ்தூரி ராஜா அவர்களுக்கு நன்றி. இறுதியாக எனது அம்மா, தினமும் அவர் செய்யும் பிரார்த்தனை தான் என்னை பாதுகாத்து இந்த இடத்தில என்னை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அம்மா இல்லாமல் நான் ஒண்ணுமே இல்லை. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம். எண்ணம் போல் வாழ்க்கை. அன்பை பகிருங்கள். ஓம் நமசிவாய" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Thank you 🙏🙏🙏❤️❤️❤️ pic.twitter.com/Lvx7hla8zK— Dhanush (@dhanushkraja) May 10, 2022