Skip to main content

சர்ச்சையான கருத்து; சாய் பல்லவிக்கு திமுக எம்.எல்.ஏ ஆதரவு

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

dmk mla trb  rajaa support sai pallavi controversy speech

 

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து வரும் சாய் பல்லவி தற்போது தெலுங்கில் ராணாவுடன் இணைந்து  விரத பருவம் படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ள இப்படம் நேற்று (17.8.2022) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்றில், "சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதாகக் காட்டியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், கரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித் தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்"  என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்குப் பலரும் ஆதரவு தெரிவித்தாலும் இந்து அமைப்பினர் மற்றும் நடிகை விஜய் சாந்தி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா நடிகை சாய் பல்லவியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள ட்விட்டர் பதிவில், "சிலர் சாய் பல்லவியைக் கண்டித்துப் பதிவிடுவதைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. இவர்களின் இந்த தாக்குதலில் இருந்து ஜனநாயகம் தப்பிப் பிழைக்க வேண்டும். நமது இளைஞர்கள் இது போன்ற விஷயங்களுக்கு அடிமையாகாமல் மனதில் பட்டதைத் தைரியமாகப் பேச வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்