Skip to main content

"இளையராஜாவிடம் கவனமாக இருக்க வேண்டும்... ஏ.ஆர்.ரஹ்மானிடம் அப்படியல்ல!"  - மணிரத்னம் பகிர்ந்த அனுபவங்கள்  

Published on 26/09/2018 | Edited on 26/09/2018

மணிரத்னம்... தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பெயர். காட்சி மொழியில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுவந்தவர். எத்தனை சர்ச்சைகள், விமர்சனங்கள், புகார்கள் எடுத்துவைத்தாலும் அவரது பங்களிப்பு மறுக்க முடியாதது.

 

maniratnam with rahman



வயது 60க்கு மேல், திரையுலகில் வயது 20க்கும் மேல், ஆனால் இன்னும் புதுமை விரும்பும் பெரும்பாலான இளைஞர்களின் சாய்ஸும் மணிரத்னம், கிரேஸும் மணிரத்னம்தான். ஒளிப்பதிவும் இசையும் இவரது படங்களில் புதுப்புது உயரங்களைத் தொட்டன. இவரது படங்களில் பாடல்களின் அழகே தனி. புதுப்புது ஒலிகளையும் பரிமாணங்களையும், தன் படங்களின் மூலம் தமிழ்த் திரையிசைக்குக் கொடுத்தவர் மணிரத்னம். இவர் இதுவரை இரண்டு முக்கிய இசையமைப்பாளர்களுடன் பயணித்திருக்கிறார்.

1983ஆம் ஆண்டில் முதன் முதலில் இவர் இயக்கிய கன்னட படமான 'பல்லவி அனுபல்லவி' தொடங்கி 1991இல் 'தளபதி' வரை இவரது படங்களுக்கு இளையராஜாதான் இசை. இளையராஜா, மணிரத்னம் இருவரின் பிறந்த தினமும் ஜூன் 2 என்பது ஸ்பெஷல். இவர்களுக்குள் பிரச்சனை, ஈகோ ப்ராபளம் என்றெல்லாம் கூறப்பட்டாலும் இன்றும் 'ராஜா சார்' என்று மரியாதையாகவே குறிப்பிடுகிறார் மணிரத்னம். 1992இல் தன் 'ரோஜா' மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயலை தமிழ் திரையுலகின் பக்கம் திருப்பிவிட்டவர் மணிரத்னம். இந்த இருவருமே மணிரத்னம் உடன் இணையும்போது வெளிவந்த பாடல்கள் எப்பொழுதும் மறக்க முடியாதவை. 'மௌனராகம்' லவ் தீம் 'ம்யூசிக்கல்லி' காலத்திலும் ட்ரெண்ட்தான். அதுபோல 'பம்பாயி'ன் உயிரே உயிரே இன்றைய காதலர்களின் சோகத்திலும் இருக்கிறது.

 

ilayaraja



இந்த இருவருடனும் தான் பணிபுரிந்த அனுபவங்களை தான் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார் மணிரத்னம். அவர் கூறியது...

"நான் இந்த இருவரிடமுமே 'ஒரு லவ் சாங் வேணும்'னோ 'ஒரு டான்ஸ் சாங்' வேணும்னோ சொல்லமாட்டேன். அதுவும் இளையராஜாகிட்ட அந்த மாதிரி சொல்றதேயில்லை. படத்தின் போக்கு, அந்த சிச்சுவேஷன், அதை சுற்றிய விஷயங்கள்தான் சொல்லுவேன். இதை சொல்லிக்கிட்டு இருக்கும்போதே அவர் தன் ஆர்மோனியத்தில ட்யூன் போட ஆரம்பிச்சுருவார். அவர்கிட்ட நாம ரொம்ப கவனமா இருக்கணும். ட்யூன் அவருக்குள்ள இருந்து பொங்கி வரும். எது நமக்கு சரியாக இருக்கும்னு கவனிச்சு வாங்கிக்கணும். பத்து நிமிஷத்துல ட்யூன் போட்டுருவார். அவரோட டீம் அதை கவனிச்சு நோட்ஸ் எடுத்து, அப்படியே வாசிக்க ஆரம்பிச்சுருவாங்க. அது மிகப்பெரிய அனுபவம். அந்த வேகத்துக்கு நாமும் போகணும். அவர்கிட்ட ஒரு மீட்டிங்குக்குப் போனால் போதும், வெளியே வரும்போது முழு பாடலோட வரலாம். அவர் எனக்குக் கொடுத்த பாடல்களிலும் இசையிலும் இதுவரை எந்தக் குறையுமே இருந்ததில்லை.

 

karthik revathy


 

roja



ஆனா, ஏ.ஆர்.ரஹ்மான் அப்படியே வேற மாதிரி. மெதுவா பண்ணுவார். நெறய பேசுவோம், நல்லா டைம் எடுத்துக்குவோம். புதுசு புதுசா முயற்சி பண்ணுவோம். ஷூட்டிங் போறதுக்கு தேவையான அளவுக்கு பாட்டை ரெடி பண்ணித் தருவார். ஷூட்டிங் போயிட்டு வந்து பார்த்தா, பாட்டு இன்னும் வேற லெவெலில் இருக்கும். முடிந்த அளவு மெருகேற்றிக்கொண்டே இருப்பார். சில நேரம், காட்சிகள் அழகா பண்ணிட்டா, அதற்கு ஏற்ப இன்னும் அழகு சேர்ப்பார். இப்படி, ஏ.ஆர்.ரஹ்மானும் இளையராஜாவும் வேலை செய்யும் ஸ்டைல் முற்றிலும் வேறு வேறு.

பின்னணி இசை அமைக்கும்போதும் இளையராஜா, ஒவ்வொரு ரீலாக படத்தின் ஆரம்பத்தில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரை வரிசையாகப் போவார். ஒரு ஒழுங்கைக் கடைபிடிப்பார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரியும்போது, நாங்க இடையில் ஏதோ ஒரு ஸீன் எடுப்போம், அதுக்கு ம்யூசிக் ரெடி பண்ணுவோம், திரும்ப வேறொரு ஸீன் எடுப்போம். அதுல வேலை செய்வோம். இப்படி ரஹ்மான் கூட ஒர்க் பண்றது ஃப்ரீயா வேற ஸ்டைலில் இருக்கும்".                                 

 

 

 

சார்ந்த செய்திகள்