நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வராத சூழல் ஏற்பட்டுள்ள இந்த நிலையில், 'எம்.எஸ் டோனி' மற்றும் சமீபத்தில் வெளியான சல்மான் கான் படமான 'ராதே' ஆகிய படங்களில் நடித்த பிரபல இந்தி நடிகை திஷா பதானி, தனது காதலரும் இந்தி நடிகருமான டைகர் ஷெராப்புடன் மும்பையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே காரில் சுற்றியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
"மஹாராஷ்ட்ரா அரசு காலை 7 மணிமுதல் பகல் 2 மணிவரை அத்தியாவசிய கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் பகல் 2 மணிக்குப் பிறகு நடிகர்கள் திஷா பதானியும், டைகர் ஷெராப்பும் காரில் வெளியே சுற்றினர். அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் திருப்தியான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் 188, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளனர்.