Skip to main content

“சாதி - மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர்” - அமீர் இரங்கல்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
ameer condolence for vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் அமீர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஏழைகளின் தோழன், எளியவர்களின் பாதுகாவலன், அநீதியைத் தட்டிக் கேட்கும் துணிச்சல்காரர் என்று நிஜ நாயகனாகவே வாழ்ந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவு உண்மையிலேயே தமிழ்த் திரையுலகுக்கும். இந்திய அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். திரைப்படங்களில் நல்லவர்களாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில், திரையிலும், தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். அவருடன் மறுபடியும் பேசி அளவளாவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்த என்னை, அவரது திடீர் மறைவு, பேரதிர்ச்சியிலும், மீளாத்துயரிலும் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய தினத்தில் உச்ச நடிகராகவும் இல்லாமல், அரசியலில் பெரும் பதவியிலும் இல்லாமல் இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் இதயத்திலும் நீங்கா இடம் பெற்றிருக்கும், சாதி - மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர். எங்களது ‘மண்ணின் மைந்தன்’ கேப்டன் விஜயகாந்த் ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் அமைதியடைய வேண்டுகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்