Skip to main content

18 வருடங்கள் கழித்து மீண்டும் அஜித் எடுக்கும் அவதாரம்

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
ajithkumar to be act in 3 roles in adhik ravichandran movie

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். இப்போது பைக்  பயணத்தில் உள்ளார். 

இப்படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படம் குட், பேட், அக்லி என்ற தலைப்பில் தயாராகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளது. பொங்கல் 2025ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கு முன்னதாக கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான படத்தில் அப்பா மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து 18 வருடங்கள் கழித்து மீண்டும் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. 

சார்ந்த செய்திகள்