தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார். கார் வாங்கும்போது நுழைவு வரி தவிர்த்து இறக்குமதி வரி உள்ளிட்ட இன்ன பிற வரிகளை விஜய் செலுத்தியிருந்தார். பின், காரை சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்த போது நுழைவு வரி கட்டாயம் செலுத்த வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர் விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு வரி விலக்கு கேட்டதற்காக ஒரு லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், திரையில் சமூக நீதி பேசும் நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக மட்டும் இருக்காமல் ரியல் ஹீரோக்களாகவும் இருக்கவேண்டும் எனக் கருத்துத் தெரிவித்தார்.
தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நீக்குவதோடு தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளையும் திரும்பப்பெறவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், விஜய் செலுத்த வேண்டிய வரி தொகையை ஒரு வார காலத்திற்குள் வணிக வரித்துறை கணக்கிட்டுக் கூறவேண்டும் என்றும் அதன் பிறகு ஒரு வார காலத்திற்குள் நடிகை விஜய் அந்தத் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
அந்த வகையில், நடிகர் விஜய் வைத்துள்ள ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு ரூ.40 லட்சம்வரை வரி செலுத்த வேண்டும் என வணிக வரித்துறை கணக்கிட்டுக் கூறியது. இதில், ரூ. 8 லட்சத்தை வாகனத்தைப் பதிவு செய்யும்போதே நடிகர் விஜய் செலுத்திவிட்ட நிலையில், தற்போது 32 லட்ச ரூபாயை நடிகர் விஜய் செலுத்தியுள்ளார். இதன் மூலம், கடந்த சில வாரங்களாக விஜய்யை சுற்றி இருந்த ரோல்ஸ்ராய்ஸ் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.