Skip to main content

'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை...' கண்ணதாசனின் கவிநுட்பத்திற்கான சான்று !

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

rajesh

 

நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஆன்மிகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், 'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்...' என்ற பாடலை கவிஞர் கண்ணதாசன் எவ்வளவு நுட்பமாக எழுதியிருப்பார் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்...' என்று பாடல் 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்றிருக்கும். இந்தப்பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பார். காதல் பாடல்களில் கண்ணதாசன் எழுதியவற்றையெல்லாம் பிறரால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. நாம் என்னவெல்லாம் கற்பனை செய்கிறோமா அதை நிஜ வாழ்க்கையில் செய்யமுடியாது என்பார் பிளேட்டோ. இது உண்மையும்கூட. பல கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்களின் வாழ்க்கையை நேரடியாக பார்த்துவிட்டுத்தான் இதை நான் கூறுகிறேன். சினிமாவைப் பார்த்து இப்படியெல்லாம் நடந்தால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைப்பது நிஜ வாழ்க்கையில் நடப்பதில்லை. 

 

'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்...' என்ற பாடலை மிகநுட்பமாக கண்ணதாசன் எழுதியிருப்பார். முதல் வரியைக் கவனித்தாலே உங்களுக்கு அது புரியும். மிகப்பெரிய கூட்டத்தில் இருந்தாலும் அங்கிருக்கும் ஓராயிரம் பார்வையில் உன் பார்வையை நான் கண்டுபிடித்துவிடுவேன் எனக் கூறுகிறார். காதலிப்பவர்களுக்கு இது நன்றாக புரியும். அவர்களுக்கு இடையேயான அந்த பரிபாஷைகள் மிக அருமையாக இருக்கும். ஆண்களுக்கு 130 டிகிரிதான் பார்வை கோணம் உண்டு. ஆனால், பெண்களுக்கு 160 டிகிரி பார்வை கோணம் உண்டு. 'உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்...' இத்தகைய வரிகளையெல்லாம் கண்ணதாசனுக்கு முன்பு சினிமா பாடலில் யாரும் எழுதியதில்லை. 

 

'நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும் உனைப்பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போறதில்லை... உலகத்தின் கண்களிலே உருவம் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை...' ஆத்மார்த்தமான காதல் என்று நாம் சொல்கிறோமே; அந்தக்காதலை எவ்வளவு நுட்பமாக கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார் என்று கவனியுங்கள். 'இந்த மானிடர் காதலெல்லாம் மரணத்தில் மாறிவிடும்... இந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்... நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும்கூட வரும்...' மனிதர்களுடைய காதல் என்றால் மரணம் வரும்போது அது காணமால் போய்விடும். என்னுடைய காதல் தெய்வீகக் காதல் என்று கதாநாயகியிடம் கதாநாயகன் கூறுகிறான். 

 

'இந்தக் காற்றினில் நான் கலந்தேன்... உன் கண்களைத் தழுவுகிறேன்...' கட்டியணைப்பது, தலையைக் கோதுவது என்றுதான் தமிழ் சினிமாவில் பாடல்கள் வந்திருக்கின்றன. கண்களைத் தழுவுகிறேன் என்று  பாடல்களுக்கு புதுமை கொடுத்தவர் கண்ணதாசன். 'இந்த ஆற்றினில் நான் ஓடுகிறேன்... உன் ஆடையில் நான் ஆடுகின்றேன்...' ஆற்றில் வரும் தண்ணியில் நாயகியின் ஆடை அசைந்தாடுவதை மிக அற்புதமான கற்பனையில் கொண்டுவந்திருக்கிறார் கண்ணதாசன். 'நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்...' ராவணனின் தங்கை சூர்ப்பனகை சீதையின் அழகை ராவணனிடம் சொல்லி வர்ணிக்கையில், அவன் காதல் மயக்கமாகி சீதை பற்றி விசாரிக்கிறான். அப்போது அவனது முகம் மாறுவதைக்கண்டு, என்ன என்று சூர்ப்பனகை கேட்கிறாள். தனக்கு எதைப் பார்த்தாலும் சீதையாகத் தெரிவதாக இராவணன் கூறுகிறான். காதல் மயக்கம் கண்டுவிட்டால் காணும் பொருளெல்லாம் அவர்களாகத் தெரிவார்கள் என்பார்கள். இதைத்தான் கண்ணதாசன் இங்கு குறிப்பிடுகிறார். இந்தப்பாடலை சாதாரணமாகக் கேட்டால் மிகச்சாதாரணமான பாடல்போலத்தான் தெரியும். ஆனால், சிறிய சோகம் கலந்து பாடியுள்ள எம்.எஸ்.வி குரலோடு உள்வாங்கி கேட்கும்போது வேறுமாதிரியான பாடலாக இருக்கும். இப்பாடலிலேயே, 'இந்தக் காற்றினில் நான் கலந்தேன்... உன் கண்களைத் தழுவுகிறேன்...' என்ற வரிதான் எனக்கு மிகவும் பிடித்தமான வரி. இதற்கு ஒப்பான வரியை இதுவரை நான் கேட்டதில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலைமாமணி ராஜேஷை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி, கமல்

Published on 21/09/2022 | Edited on 22/09/2022

 

Rajini and Kamal congratulate  actor Rajesh

 

கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நாயகனாகவும் குணச்சித்திர கதாப்பாத்திரமாகவும் நடித்து வந்தார் கலைமாமணி நடிகர் ராஜேஷ்.
ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் திரைத்துறை வருவதற்கு முன்பு சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ஆசிரியராக பணியாற்றியபோது திரைத்துறையில் நுழைய ஆசையிருந்தது; அதன்படி திரைத்துறையில் கால் பதித்தார்

 

திரைத்துறையில் இயற்கையான நடிகர் என்று பாராட்டப்பட்ட ராஜேஷ் சுமார் 45 ஆண்டுகளில் 150 படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போதும் நான்கு படங்களில் நடித்து வரும் இவர் கடந்த சில வருடங்களாக ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார், மேலும், ஜோதிடத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களையும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியவர்களையும் பேட்டி எடுத்தும் வந்தார்.

 

நக்கீரன் யூடியூப் சேனலில் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை நேர்காணல் செய்திருந்தார். நான்கு தொடராக வந்த நிகழ்ச்சி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. 

 

Rajini and Kamal congratulate  actor Rajesh

 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அரசு  நியமித்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அந்த நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு நபர்களும் அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கலைமாமணி நடிகர் ராஜேஷை நேரில் அழைத்தது வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் நடிகர் ராஜேஷுக்கு பொன்னாடை அணிவித்து, நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து கமல்ஹாசனும் நடிகர் ராஜேஷை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

இதனிடையே தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் பொறுப்பேற்று கொண்டதை அறிந்த சிவகுமார், தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் தான் வரைந்த ஓவிய புத்தகத்தையும் நடிகர் ராஜேஷுக்கு வழங்கி மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார். 

 

 

 

Next Story

எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு தலைவராக நடிகர் ராஜேஷ் நியமனம்

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

tamilnadu goverment appointed actor rajesh as a head of tamilnadu goverment m.g.r film training centre

 

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். இப்போதும் முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை படத்தில் நடித்திருந்தார். 

 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள் மற்றும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முதன்மை நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பல தரப்பட்ட திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பிற திரைப்படத் துணைப்பாடங்களையும், மாணவர்களுக்குக் கற்றுத் தருவதே முக்கிய இலக்கு ஆகும். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் சென்னை தரமணியில் 15.25 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வருகிறது.

 

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் ஒரு தலைவர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள அந்நிறுவனத்தின் தலைவராக திரைப்பட நடிகர் ராஜேஷ் அவர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது" என குறிப்பிட்டுள்ளது.