Skip to main content

“கமல் சார் அன்று சொன்னார்.. அதனால் தான் இந்தப் பட்டம்” - சுவாரசியம் பகிர்ந்த சுகுமார்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

actor kadhal sugumar said kamalhassan is the reason for he acting in kadhal movie

 

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'காதல்'. இயக்குநர் ஷங்கர் தயாரித்திருந்த இப்படம் பரத், சந்தியா உள்ளிட்டோருக்கு நல்ல அறிமுகமாக அமைந்திருந்தது. இப்படத்தில் ஸ்டீஃபன் என்ற கதாபாத்திரத்தில் பரத்தின் நண்பனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சுகுமார். இப்படத்தில் பிரபலமானதைத் தொடர்ந்து 'காதல் சுகுமார்' என்று பலராலும் அறியப்பட்டார். 

 

ad

 

இந்நிலையில், 'காதல்' படத்தில் சுகுமார் நடிக்க கமல்ஹாசன் தான் காரணம் என தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வசூல்ராஜா MBBS பட சூட்டிங்கில் 'சிரிச்சி சிரிச்சி வந்தா சீனாதானா டோய்...' பாடலுக்கு பிரசாத் ஸ்டூடியோவில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கையில் ஷங்கரின் 'எஸ் பிக்சர்' அலுவலகத்தில் இருந்து கால் செய்து, ‘இன்று மாலை மதுரை கிளம்ப வேண்டும். தெப்பக்குளத்து ஏரியா பர்மிஷன் வாங்கியாச்சி.. நாளைக்கு முதல் நாள் சூட்ல கமிட் ஆகலேன்னா ஆள மாத்திருவாங்க..’ என மேனேஜர் சிவா திரும்ப திரும்ப கால் செய்து கொண்டே இருந்தார்.

 

திடீர்னு கூப்ட்டா எப்படிப் போவது?.. கமல் சார் படத்தை விட்டு எப்படி செல்வது.. கன்டினியூட்டி மிஸ்ஸாகும் என இங்கும் விடமாட்டார்கள் எனக் குழப்பத்தில் இருக்க.. கமல் சார் செட்டுக்கு வந்திருந்தார். அவர் அந்தப் பாடலில் இல்லை. ஆனாலும்  மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்காக ஏர்போர்ட் போகும் வழியில் ஸ்டுடீயோ விசிட். நான் ஒரு மாதிரியாக இருந்ததைப் பார்த்த கமல் சார் அருகே அழைத்து கேட்க நான் மெதுவாக விசயத்தைக் கூற..

 

சங்கர் சார் தயாரிக்கும் படமென்றால் நிச்சயம் நல்ல ரோலாக இருக்கும்... இந்த பாடலில் கும்பல்ல கோவிந்தாதானே.. ஒரே நாள்தானே நைஸா கிளம்பி போய்ட்டு வந்துடுங்க என தைரியம் கொடுத்தார்.

 

நான் சாயந்திரம் பேக்கப் ஆனதும் போட்ட டிரஸ்ஸுடன் மதுரை கிளம்பிப் போய் அடுத்தநாள் நானும் பரத்தும் பைக்கில் சந்தியா முன்னால் சிக்னலில் விழும் காட்சியை எடுத்தார்கள். அன்று மாலையே சென்னைக்கு புறப்பட்டு நேராக ஸ்டூடியோவுக்கே வந்து விட்டேன் நல்ல வேளையாக நான் ஒருநாள் இல்லாமல் இருந்ததைப் பற்றி யாருமே கேட்கவில்லை. நானும் அன்று பிரபு சாருடன் காம்பினேஷன் சீனில் ஆடினேன். கமல் சார் மட்டும் அன்று சொல்லாமல் இருந்திருந்தால் 'காதல்' பட்டமே எனக்கு கிடைத்திருக்காது. என பதிவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்