Skip to main content

அதீத உடலுறவுக்கு வற்புறுத்துவதும் வன்முறையே -  வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 28

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

advocate-santhakumaris-valakku-en-28

 

தான் சந்தித்த முக்கியமான வழக்கு ஒன்று குறித்து குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்

 

ஆண்டனி என்பவர் மீது அவருடைய மனைவி போட்ட வழக்கு இது. ஆண்டனிக்கு இந்தப் பெண்ணோடு திருமணமாவதற்கு முன்பே இன்னொரு திருமணம் நடந்திருக்கிறது. அதை அவர் மறைத்திருக்கிறார். ஆண்டனி கலைகளில் அதிக ஆர்வமுள்ள நபர். இரண்டாவதாக இந்தப் பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் அந்தப் பெண்ணை வேலைக்குச் செல்ல அனுமதித்தார். இருவரும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். 

 

அவர் நிறைய இடங்களில் கடன் வாங்கியிருப்பது அதன் பிறகு தெரிந்தது. கடன்காரர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து மிரட்ட ஆரம்பித்தார்கள். பல்வேறு இடங்களில் அவர் கடன் வாங்கி வைத்திருந்தார். வீட்டு செலவுக்குக் கூட ஒழுங்காக அவர் பணம் கொடுப்பதில்லை. வீட்டுக்கு வந்து தன்னுடைய கணவனை கடன்காரர்கள் மிரட்டுவது, அவளுக்கு பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடன்களை அடைப்பதற்காக இவளும் அவனுக்குக் கடன் வாங்கிக் கொடுத்தாள். 

 

இதுவும் ஒரு வகையான குடும்ப வன்முறை தான். நம்முடைய நாட்டில் ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் பெண்ணைத்தான் குற்றம் சுமத்துவார்கள். உண்மையில் அதில் ஆண், பெண் இருவருக்குமே பங்குண்டு. இங்கு அவன் வாங்கிய கடன் பிரச்சனைகள் அவளையும் பாதித்தன. இருவரும் பிரியலாம் என்று முடிவு செய்தனர். அவனுடைய கடன் பிரச்சனைகள் அவளைப் பாதிக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இறுதியில் அவனுடைய பெற்றோரே அவனுடைய கடன்களை அடைத்தனர். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து பெற்றனர். 

 

ஆண்களுக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. ஒரு பெண்ணை அடித்து, உதைத்து, வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னால் அவள் எங்கே போவாள்? இவை அனைத்துமே பொருளாதார வன்முறைக்குள் அடங்கும். அதீதமான செக்ஸ் வேண்டி பெண்ணைத் துன்பப்படுத்தினால் அதுவும் வன்முறைதான். இதை ஆண்கள் அனைவரும் உணர வேண்டும். பெண்ணை மதித்து, சரியான முறையில் நடத்தி, நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு.