Skip to main content

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Indian appoints new CEO of Twitter

 

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் பராக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டுவந்த ஜாக் டோர்சி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த பராக் அந்தப் பொறுப்பிற்கு வந்துள்ளார்.  

 

ஐ.ஐ.டி. மும்பையில் இளங்கலை கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்ற பராக், பின்னர் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி முடித்தவர். 2011ஆம் ஆண்டு மென்பொருள் பொறியாளராக ட்விட்டர் நிறுவனத்தில் இணைந்த அவர், தற்போது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார். 

 

உலகளவில் ட்விட்டர் சமூக வலைதளம் மிகவும் பிரபலமான ஒன்று. அதிக பயனர்களைக் கொண்டது மட்டுமல்லாமல், அதிகம் பேர் தொடர்ந்து பயன்படுத்தும் சமூக வலைதளமாக ட்விட்டர் விளங்குகிறது. 

 

உலகின் முன்னணி நிறுவனங்களாக உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரியாக சத்யா நாதெள்ளா ஆகியோரைத் தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பராக் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இந்தியர்கள் தொடர்ந்து நியமிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகளின் அக்கவுண்ட்டை முடக்க மத்திய அரசு உத்தரவு; எக்ஸ் நிறுவனம் அதிருப்தி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Company X is dissatisfied for Central government order to freeze pages

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில், நேற்று (21-ஆம் தேதி) காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார், விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது. 

இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்து சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். 

எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கையின்படி, பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய அரசின் நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை. ஆனால், வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்த உத்தரவை பொதுவெளியில் வைப்பது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

முடங்கியது 'எக்ஸ்'

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
 Disabled 'X'

உலக அளவில் எக்ஸ் எனும் ட்விட்டர் இணையதளம் முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல பணக்காரரான எலான் மஸ்க்கால் வாங்கப்பட்ட பிறகு பல்வேறு பிரச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது ட்விட்டர். டிவிட்டருக்கு எக்ஸ் (x ) என பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது 'x' வலைத்தளமானது உலகம் முழுவதும் முடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பல கோடி பயனர்கள் அவதியுற்று வருகின்றனர்.