திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்(23) நித்திஷ்( 22), ராஜேஷ்(19), தினேஷ்(18) ஆகிய 4 பேர் தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடையில் கூலி வேலைக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி பட்டாசுக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேரும் பலியானார்கள். இந்நிலையில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்திருந்தது. அதற்காக தலா 5 லட்சம் ரூபாய் என 20 லட்சம் நிவாரண நிதி ஒதுக்கியது.
கர்நாடக அரசு வழங்கிய இந்த நிவாரண நிதிக்கான காசோலையை கர்நாடக அரசு வருவாய்த் துறை அலுவலர்கள் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்திற்கு நேரில் வந்து வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் முன்னிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் பெற்றோர்களிடம் தலா 5 லட்ச ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.