Skip to main content

திருமணமான 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் 

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

A young woman committed herself after 6 months of marriage

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு ஜெயசீலி என்ற 23 வயது பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. 25 வயதான ஜெகதீஷ், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.  

 

இந்நிலையில், புதிதாகக் கல்யாணமான தம்பதி என்பதால் கணவன், மனைவி இடையில் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்து வந்துள்ளது. இந்த சண்டைகள் நாளடைவில் கடும் வாக்குவாதங்களில் முடிந்துள்ளது. இதனால் ஜெகதீஷின் அம்மா மற்றும் அவரது தங்கை இருவரும் சேர்ந்துகொண்டு ஜெயசீலிக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த சூழலில், 17 ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஜெயசீலி தனது கணவரான ஜெகதீசை செல்போனில்  தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், ஜெயசீலியுடன் பேச விருப்பம் இல்லாத ஜெகதீஷ் அவரது போனை கட் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயசீலி தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். இதையடுத்து ஜெயசீலி உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதையடுத்து, 23 வயது இளம்பெண்ணை இழந்த சோகத்தில் மருத்துவமனை வளாகத்தில் ஜெயசீலியின் குடும்பத்தார் அங்கேயே அழுது புரண்டனர். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த ஜெகதீஷ் குடும்பத்தாரை பெண்வீட்டார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதைத் தடுக்கச் சென்ற இன்ஸ்பெக்டர் அருள் ராஜுக்கும்,  வலது கையில் காயம் ஏற்பட்டது. மேலும், இந்தச் சம்பவத்தில் மருத்துவமனை கண்ணாடிகளும் உடைக்கப்பட்டது.

 

இதுகுறித்து, ஜெயசீலி குடும்பத்தார் பேசும்போது, ''ஜெயசீலியின் சாவில் மர்மம் இருக்கிறது. அவளது நைட்டி கிழிந்திருந்தது. தலை மற்றும் கால்களில் காயம் இருந்தது. ஆகவே, இதில் சம்பந்தப்பட்ட ஜெகதீஷ் குடும்பத்தாரை கைது செய்ய வேண்டும் எனக் கண்ணீருடன் பேசியுள்ளனர். இதையடுத்து, ஜெகதீஷ் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

திருமணமான ஆறே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிவகங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்