Skip to main content

திருமணமாகாத விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

young man lost their life in frustration of not getting married

 

ஈரோடு, கருங்கல்பாளையம், கமலா நகரைச் சேர்ந்தவர் வள்ளி (50). இவரது கணவர் செல்வம் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் பிரபாகரன் (32). கூலிவேலை செய்து வருகிறார். இளைய மகன் ஆனந்த் (29). டிப்ளமோ படித்துள்ள இவர், பி.வி.சி. கதவுகள் பொருந்தும் வேலை செய்துவந்தார்.

 

இந்த நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ஆனந்த் தனது தாயிடம் கேட்டு வந்துள்ளார். அவரும், மூத்த மகன் பிரபாகரனுக்கு திருமணம் செய்த பின்னர் ஆனந்துக்கு செய்து வைப்பதாக கூறியுள்ளார். இதனால், ஆனந்த் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் வள்ளி, தங்களது உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு நேற்று முன் தினம் சென்று விட்டார். அன்று இரவு வீட்டில் வள்ளியின் மகன்கள் பிரபாகரனும், ஆனந்தும் இருந்துள்ளனர்.

 

மூத்த மகன் பிரபாகரன் இருவருக்கும் சாப்பாடு வாங்குவதற்காக சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, படுக்கையறையில் ஆனந்த் பேனில் தூக்கிட்டு தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ஆனந்த் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்