Skip to main content

‘தம்பி டாஸ்மாக் கடைய மூடு இல்லைன்னா கல்லுதான் வரும்’ - போராட்டத்தில் குதித்த பெண்கள்

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

Women struggle in Sivagangai demanding closure of Tasmac

 

“டாஸ்மாக் கடைய மூடுவீங்களா மாட்டிங்களா” என போராட்டத்தில் குதித்த பெண்கள் கடைகள் மீது கற்களை பறக்க விட்ட சம்பவம் சிவகங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் நேரு கடை வீதிக்கு அருகே உள்ளது காயிதே மில்லத் நகர். இந்தப் பகுதியில் நீண்ட காலமாக டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை குடியிருப்பு பகுதிகளின் மையத்தில் இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வந்துள்ளது. மேலும், இங்கு வரும் குடிமகன்களால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தொல்லை ஏற்படுகிறது. சில நேரங்களில் இவர்களால் அடிதடி சம்பவங்களும் விபத்துகளும் நடக்கிறது. இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

இந்நிலையில், டாஸ்மாக் கடை இருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் முஸாபர் கனி. 40 வயதான இவர், கடந்த சனிக்கிழமை இரவு அன்று, தன்னுடைய வீட்டுக்கு அருகாமையில் உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த டாஸ்மாக் கடை எதிராக டூவீலரில் வந்த நபர் ஒருவர் முஸாபர் கனி மீது மோதியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த முஸாபர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் அடுத்த நாளே உயிரிழந்துவிட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர். மேலும், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

 

அப்போது, அவர்கள் நேரு கடை வீதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே வந்தபோது, அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து முஸாபர் கனியின் உடலை நிறுத்தி வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர், அந்த டாஸ்மாக் கடை மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத் தொடா்ந்து அந்தப் பகுதியிலிருந்த அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், அந்த இடமே போராட்டக் களமாக காட்சியளித்தது. பின்னர், இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகளும் காவல்துறையினர்களும் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த டாஸ்மாக் கடை விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என உறுதியளித்த பிறகு அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். மேலும், இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்