Skip to main content

நகை, பணத்துடன் சுருட்டும் பெண், கணவர் கைது! 

Published on 09/10/2022 | Edited on 09/10/2022

 

 

Woman rolling with jewelry, money, husband arrested!


சேலம் அருகே, போலி திருமணங்கள் மூலம் கணவர் வீட்டில் இருந்து நகை, பணத்தைச் சுருட்டிச் சென்ற பெண் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் தீபன் (வயது 23). மளிகை கடை வைத்துள்ளார். இவருக்கு முகநூல் மூலம் கவுசல்யா என்கிற சரண்யா என்ற இளம்பெண் அறிமுகம் ஆகியுள்ளார். 

 

இருவருக்கும் அலைபேசியில் ஆரம்பமான நட்பு, பின்பு காதலாக மலர்ந்தது. இந்நிலையில் கடந்த மே 25- ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். பெண் வீட்டார் தரப்பில் அவருடைய தாய் மாமன் என்று கூறிக்கொண்ட ரகுவரன் என்பவர் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். 

 

இவர்களின் திருமண பந்தம் ஒரு மாதம் காலம் சுமூகமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த 30 பவுன் நகைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் சுருட்டிக்கொண்டு சரண்யா திடீரென்று ஓட்டம் பிடித்தார். 

 

அதிர்ச்சி அடைந்த தீபன், இதுகுறித்து ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

முதல்கட்ட விசாரணையில் சரண்யாவும், ரகுவரனும் சமூக வலைத்தளங்கள் மூலம் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு வலைவிரித்து அவர்களை திருமணம் செய்துக் கொண்டு, ஓரிரு மாதத்தில் புகுந்த வீட்டில் இருந்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடிப்பதையே தொழிலாக வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. 

 

அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், நாமக்கல் நடராஜபுரத்தில் வைத்து சரண்யா (வயது 34), ரகுவரன் (வயது 32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தீபன் வீட்டில் திருடிச்செல்லப்பட்ட 30 பவுன் நகைகளில் 15 பவுன் நகைகள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

 

பிடிபட்ட சரண்யாவின் சொந்த ஊர், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள சந்தனகிரி ஆகும். அவருடைய உண்மையான பெயர் அருள்ஜோதி. இவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் சன்னியாசிக்குண்டு பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு உறவினர்கள் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் விபச்சார கும்பலுடன் சரண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த கும்பலுடனும் சரண்யா சுற்றி வந்துள்ளார். 

 

இந்த நிலையில்தான் நாமக்கல்லைச் சேர்ந்த ரகுவரனை, அவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அதன்பின்னர் அவர்கள் இருவரும் கோவை மாவட்டம் வீரகேரளத்தில் வசித்து வந்துள்ளனர். அங்கிருந்தபோதுதான் அவர்கள் இருவரும், போலி திருமணங்களை செய்து பணம் சுருட்டும் வேலைகளை தொடங்கியுள்ளனர். 

 

அதையடுத்து சென்னையைச் சேர்ந்த ஒருவரை முகநூல் மூலம் வலை விரித்துப் பிடித்துள்ளனர். அவரை திருமணம் செய்து கொண்ட சரண்யா, அவரிடம் இருந்து கணிசமான பணத்தைக் கறந்து கொண்டு கம்பி நீட்டியுள்ளார். அதன்பிறகு, ஆத்தூர் தீபனை திருமணம் செய்து, நகை, பணத்துடன் தப்பிச்சென்ற போதுதான் காவல்துறையில் பிடிபட்டுள்ளனர். இவர்கள் மீது நாமக்கல் மாவட்டத்தில் இதேபோன்ற போலி திருமண மோசடி வழக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

 

பிடிபட்ட இருவரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் சரண்யாவை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும், ரகுவரனை சேலம் மத்திய சிறையிலும் காவல்துறையினர் அடைத்தனர். 

 

நாமக்கல் மாவட்டத்தில் இதேபோல ஒரு கும்பல் 12 போலி திருமணங்களை நடத்தி நகை, பணத்தை சுருட்டிச்சென்ற சம்பவத்தின் பேரில் சமீபத்தில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரை பரமத்தி வேலூர் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். அந்த சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள் மேலும் ஒரு கல்யாண மோசடி சம்பவத்தில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.