திருச்சி மாநகர் முழுவதும் லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் கள்ளச் சந்தையில் மது விற்பனை போன்ற சட்ட விரோத குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
கடந்த 27ஆம் தேதிமுதல் 29ஆம் தேதிவரை திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு தணிக்கையில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 31 நபர்கள் மீது 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 10 நபர்கள் மீது 5 வழக்குகள் பதியப்பட்டு, அவர்களிடமிருந்து மொத்தமாக 4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த 39 நபர்கள் மீது 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 271 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனுடன் கடந்த 3 நாட்களில் மட்டும் திருச்சி மாநகரில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 126 நபர்கள் மீது 106 வழக்குகளைப் பதிவுசெய்து சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.