Skip to main content

ஆசைக்கு இணங்க மறுத்த திருநங்கையை கத்தியால் குத்திய இளைஞர்கள்! 

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

Transgender had trouble in coimbatore

 

ஆசைக்கு இணங்க மறுத்த திருநங்கையை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர்களின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம், சூலூர் பள்ளாளையம் பகுதியில் வசித்து வருபவர் திருநங்கை தர்ஷா. இவர், சோனா என்ற இன்னொரு திருநங்கையின் பாதுகாப்பில் இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறார். இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு மேல், பள்ளிப்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.


கோவை ஒண்டிபுதூர் மிராஜ் தியேட்டர் அருகே வந்துகொண்டிருந்த போது, திருநங்கை தர்ஷாவை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர், தர்ஷாவை பாலியல் ரீதியாக அணுகியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த தர்ஷாவை, மர்மநபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதில், அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்த தர்ஷா, கூச்சலிட்டிருக்கிறார். 


இதனால், அதிர்ந்துபோன மர்ம நபர்கள், திருநங்கையை கத்தியால் குத்தி கொலைசெய்ய முயன்றிருக்கின்றனர். இதில், திருநங்கை தர்ஷாவின் கை மற்றும் கழுத்தில் ஆழமான கத்திகுத்து ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சமயத்தில், அந்த வழியாக ரோந்து வந்த சிங்காநல்லூர் போலீசார், தர்ஷாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். 


அதற்குள், தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த திருநங்கைகள், தர்ஷாவை தொடர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருநங்கையை பாலியல் ரீதியாக அணுகிய இளைஞர்கள், கோவை நீலிக்கோனாம்பாளையத்தில் டாஸ்மாக் கடையில் வேலைபார்க்கும் மேகனாதன் மற்றும் பூபாலன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 


ஆசைக்கு இணங்கமறுத்த திருநங்கையை கத்தியால் குத்திய இளைஞர்களின் செயல், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்