லாரி மோதி சாலை விபத்தில் உயிரிழந்த திமுக சமூக வலைத்தள செயல்பாட்டாளர் ஸ்டாலின் ஜேக்கப் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் ஜேக்கப் திமுக சமூக வலைத்தள செயல்பாட்டாளராக இருக்கும் அதே நேரத்தில் ‘வாட்ட கருவாட்’ என்ற உணவகத்தின் இணை நிறுவனராகவும் உள்ளார். பிரபல புகைப்படக் கலைஞராகவும் இருந்த ஸ்டாலின் ஜேக்கப் இன்று சாலை விபத்தில் லாரி மோதி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் வேளாண்மைத் துறை தனி நிதிநிலை அறிக்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் ஸ்டாலின் ஜேக்கப் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி மோதி அவரும் அவர் உடன் வந்த ஜீவா என்பவரும் கீழே விழுந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருந்தும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த ஸ்டாலின் ஜேக்கப்பிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டதாவது, “நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்” எனத் தெரிவித்துள்ளார்.