தமிழகத்தில் இன்று புதிதாக 1,562 பேருக்கு ஒரே நாளில் கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 33,229 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஒன்பதாவது நாளாக இன்றும் கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1,520 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பிறமாநிலங்கள் மற்றும் பிற நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள். இன்று 528 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக தமிழகத்தில் 17,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் ஆறாவது நாளாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 224 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒன்பதாவது முறையாக இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து வருகிறது. தனியார் மருத்துவமனையில் 3 பேர், அரசு மருத்துவமனையில் 14 பேர் என இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 22 வயது இளைஞர்கள் உயிர் இழந்துள்ளார். மேலும் தமிழகத்தில் 60 வயதிற்கும் கீழ் உள்ள 8 பேர் ஒரே நாளில் கரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.