Skip to main content

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

coronavirus prevention tn govt announced more restriction

 

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் மே 6ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மே 6ஆம் தேதி காலை 04.00 மணி முதல் மே 20ஆம் தேதி காலை 04.00 மணி வரை 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

 

மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் ஆகியவை குளிர்சாதன வசதியின்றி மதியம் 12.00 மணிவரை மட்டுமே இயங்கலாம். 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் தவிர இதரக் கடைகள் அனைத்தும் திறக்கத் தடை விதிக்கப்படுகிறது.

 

தேநீர் கடைகள் மதியம் 12.00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது; உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்.

 

மீன் இறைச்சிக் கடைகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையே இயங்கும். 

 

அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

 

பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், அரசு, தனியார் பேருந்துகள், வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50% பேர் மட்டுமே பயணிக்கலாம்.

 

வணிக வளாகங்களில் பலசரக்குக் கடைகள், காய்கறி கடைகளுக்கு இனி அனுமதியில்லை. மூன்றாயிரம் சதுர அடி கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்களுக்கான தடை தொடரும்.

 

இறுதி ஊர்வலம், அதைச் சார்ந்த சடங்குகளில் இனி 25 பேருக்குப் பதில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. சமுதாயம், அரசியல், கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு நாள் உட்பட அனைத்து நாட்களிலும் திருமண விழாக்களில் 50 பேர் பங்கேற்க தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது.

 

ஊரகப் பகுதிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் அழகு நிலையங்கள், ஸ்பா இயங்கத் தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், ஸ்பா இயங்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

ஏற்கெனவே அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை அமலில் இருக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்