Skip to main content

சொத்தில் பங்கு கேட்ட தம்பி; போதையில் அண்ணன் வெறிச் செயல்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

 thiruvannamalai brothers ancient property share incident 

 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்தில் உள்ள கீழ்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என 4 பேர் உள்ளனர். இந்நிலையில் அண்ணன் ஏழுமலை, தம்பி திருமலை ஆகிய இருவரும் இதே பகுதியில் வசிக்கின்றனர். கூலி வேலை செய்யும் இவர்களில் ஏழுமலை மதுவுக்கு அடிமையானதால் அவரது மனைவி பிள்ளைகளோடு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். திருமலைக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அண்ணன் தம்பி இருவரும் கூலி வேலைக்கு சென்று, சமைத்து சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளனர். அண்ணன் தம்பி இருவரும் இரவில் குடித்துவிட்டு தினமும் சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களுக்கு பழக்கமாகி அதனை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.

 

இந்நிலையில், பூர்வீக வீட்டில் பாகம் உள்ளதால் வீட்டு பத்திரத்தை தா என அண்ணன் ஏழுமலையிடம் திருமலை கேட்டுள்ளார். கல்யாணம் ஆகாத உனக்கு எதுக்குடா சொத்து என திட்டியுள்ளார். இதனால் இருவரும் சண்டை போட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு வீட்டுக்குள் படுத்திருந்த தனது தம்பியின் தலையில் இரும்பு ராடால் அடித்துள்ளார் ஏழுமலை. இதில் திருமலை சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

 

தம்பி இறந்து விட்டதால் என்ன செய்வது என யோசித்தவர் உடனே வீட்டின் பின்னால் செப்டிக் டேங்க் கட்ட தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருந்துள்ளது. அதில் தனது தம்பியின் உடலை இழுத்துச் சென்று பள்ளத்தில் தள்ளி மண் போட்டு மூடி உள்ளார். மறுநாளான நேற்று காலை தெரு நாய்கள் அந்த பள்ளத்தை சுற்றி சுற்றி வந்து குறைத்துள்ளன. அக்கம் பக்கத்து வீட்டினர் சந்தேகமடைந்து அங்கு போய் பார்த்தபோது போதையில் பள்ளத்தை சரியாக மூடாததும், உடல் பாகங்கள் வெளியே தெரிந்துள்ளதைத் தொடர்ந்து அதிர்ச்சியாகி உள்ளனர். உடனே இதுகுறித்து கடலாடி காவல் நிலையத்திற்கு தகவல் தந்துள்ளனர். போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை வெளியே எடுத்தவர்கள், ஏழுமலையை தேடிப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்