Skip to main content

முனிக்கு முன் ஆட்டுக்கறி படையலும், பட்டை சோறும்...மரபு மாறாதாக கிராமங்கள்!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

ஆடி பிறந்துவிட்டாலே விவசாயிகள் விதைப்பை தொடங்கும் முன்னால் விதை நேர்த்தி செய்து கொள்ள முளைப்பாரி திருவிழா நடத்துவதும், விதைக்க போகும் முன்பு வனங்களிலும், கிராமத்தில் எல்லையிலும் இருக்கும் கிராம காவல் தெய்வங்களுக்கு படையல் போட்ட பிறகே விதைகளுடன் வயல்களை நோக்கி செல்வார்கள். தற்போது விதைப்பு காலம் மாறிவிட்டாலும் முளைப்பாரியும், கிராம தெய்வங்களுக்காக படையலும் மாறவில்லை.

 

தமிழ்நாட்டில் இன்றளவும் சில வனங்கள் இருக்கிறது என்றால் அதை காப்பாற்றி வைத்திருப்பது வனதேவதைகள் தான். அதாவது அடர் வனத்தில் ஒரு மரமோ, மரத்தின் அடியில் உள்ள சிறு கல்லோ தான் கிராம மக்களின் நம்பிக்கை. அது தான் கடவுள். காட்டை அழித்து கோயில் கட்டுவோம் என்று பாங்காளிகள் கூடி முடிவு செய்தாலும் காட்டை அழிக்க விடுவதில்லை என்ற கூறுக்கிறவர்களால் தான் ஊருக்கு ஒன்றிரண்டு காடுகள் உள்ளது.

 

tamilnadu pudukkottai semmanaampottal viilage Avudayar temple non veg food feast


 


ஆடி மாதத்தில் ஊரெங்கும் உள்ள முனிகளுக்கு தான் படையல் நடக்கிறது. நேர்த்திக் கடன் செய்தவர்கள் கொண்டு வரும் ஆடுகளை பூசாரி உத்தரவையடுத்து கிடா வெட்டி வெட்டி தள்ள அங்கேயே சமைத்து ஊருக்கெல்லாம் கறிவிருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் கறிவிருந்து நடந்தாலும் ஒரு சில கிராமங்களில் இன்னும் பழைய மரபுகள் மாறவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பகுதியில் உள்ள முனிக்கோயில்களுக்கு வாரத்தில் பல நாட்கள் பூஜைகள் நடக்கிறது. ஒவ்வொரு பூஜையிலும் 50- க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு படையல் வைத்து ஊரார், உறவுகள் என்று அனைவருக்கும் உணவளிக்கப்படுகிறது. ஆனால் ஆவுடையார்கோயில் பகுதியில் தான் இன்றும் பனை ஓலைகளில் தொண்னை பிடித்து அதில் சோறு போடும் மரபு பழக்கம் இருந்து வருகிறது. எத்தனை பேர் வந்தாலும் அனைவருக்கும் தொண்னை சோறுதான்.

 


சில நாட்களுக்கு முன்பு ஆவுடையார்கோயில் அருகில் உள்ள செம்மனாம்பொட்டல் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள முனிக்கு கிராமத்தினர் ஆடு வெட்டி படையல் போட்டனர். படையல் முடிந்த பிறகு அதே வயல்வெளியில் ஆளுக்கொரு பனை ஓலை தொண்னையுடன் அமர்ந்து கொள்ள கறிசோறு வழங்கினார்கள் கிராமத்தினர். சுற்றியுள்ள பல கிராம மக்களும் சாதி, மதம் பாகுபாடின்றி விளைச்சல் நிலத்தில் அமர்ந்து சாப்பிட்டனர். 

 

tamilnadu pudukkottai semmanaampottal viilage Avudayar temple non veg food feast

 


இது குறித்து சில இளைஞர்கள் கூறும் போது.. முந்தைய காலத்தில் ஆடிப்பட்டத்தில் விதைக்க போகும் முன்னால முனிக்கு படையல் போட்ட பிறகு தான் விதைக்க போவது வழக்கமாக இருந்திருக்கு. ஆளுக்கொரு ஆட்டுக்கிடா கொண்டு வந்து வெட்டி இங்கேயே சமைத்து ஊரார், உறவுகளுக்கு சோறு போடுறது வழக்கம். அடர்ந்த வனத்தில் இந்த முனி இருந்திருக்கிறது என்பதால பெண்கள் பயப்படுவார்கள் என்பதால பெண்களை அனுமதிக்கிறதில்லை. அதனால் இப்பவும் பெண்கள் வருவதில்லை.

 


கிடா வெட்டு பூஜைக்கு நாள் குறிச்சதுமே பனைமரங்களில் ஏறி பனை மட்டைகளை வெட்டி நிழலில் காயவைத்து ஆயிரக்கணக்கில் பட்டை (தொண்னை) பிடித்து வைத்துவிடுவோம். எத்தனை பேர் வந்தாலும் பட்டை இல்லைன்னு சொல்லக் கூடாது. அந்தக் காலத்தில் வாழை இலை பற்றாக்குறை இருந்த நேரத்தில் பட்டை சோறு கொடுத்திருக்காங்க. ஆனால் இப்ப வாழை இலை வந்தாலும் கூட பழைய மரபை மாற்றக் கூடாதுன்னு தான் இப்ப வரைக்கும் பட்டை பிடித்து அதில் சோறு போடுறோம். அதாவது முனிக்கு ஆட்டுக்கறி படையல் வைத்தால் பட்டையில் சோறு போடனும். அந்த வழக்கத்தில் தான் இப்பவும் செய்றோம். இதே போல சுற்றியுள்ள பல கிராமங்களில் பட்டை சோறு தான் என்றனர்.

 

காலங்களில் மாறினாலும் மரபுகள் மாறக்கூடாது என்பதற்க்கு இதே போல பல கிராமங்கள் அடையாளமாக உள்ளது.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்