கரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, "தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர். கரோனா பாதிப்பைப் பொறுத்தவரை முதலில் உயர்ந்து பின் குறையும் என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்புள்ளது. கரோனா மேலும் பரவாமல் தடுப்பது என்பது மக்களின் கையில்தான் உள்ளது. தனி மனித இடைவெளி, மாஸ்க் போன்றவற்றைப் பின்பற்றினால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி தருவதால் உணவுப்பொருள் பற்றாக்குறை இல்லை. மே மாதத்தைப் போல் ஜூன் மாதத்திலும் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கரோனா இறப்பு விகிதமும் 0.67% எனக் குறைந்து காணப்படுகிறது. மக்கள் ஒத்துழைத்தால் பொதுமுடக்கத்தில் மேலும் தளர்வு அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.