Skip to main content

ஊஞ்சல் ஆடிய மாணவன் மயங்கி விழுந்து மரணம்..!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

Student dies after fainting while swinging

 

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகில் உள்ளது மணம்பூண்டி. இங்குள்ள புது நகரைச் சேர்ந்த தனராஜ் என்பவரது மகன் 13வயது யோகேஸ்வரன். இவர் திருக்கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று (15.04.2021) மதியம் அவரது வீட்டில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்.

 

அந்த நேரத்தில் ஊஞ்சல் மீது தொங்கிக்கொண்டிருந்த துணி ஒன்று எதிர்பாராதவிதமாக ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த யோகேஸ்வரன் கழுத்தில் சுற்றியுள்ளது. ஊஞ்சல் விளையாடும் ஆர்வத்தின் காரணமாக யோகேஸ்வரன் அதைக் கவனிக்கவில்லை. இதனால் நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்துள்ளார் யோகேஸ்வரன். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக யோகேஸ்வரனை திருக்கோவிலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், யோகேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவரது பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுது துடித்தனர். இந்த விபத்தினால் 13 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். ஊஞ்சலில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன், அதில் இருந்த துணி அவரின் கழுத்தைச் சுற்றியுள்ளது.

 

விளையாடும் கவனத்தில் யோகேஸ்வரன் அதைக் கவனிக்காததால், அந்த துணி அவரது கழுத்தை இறுக்கி உயிரைப் போக்கியுள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது கூட, அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றும், அவ்வப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்கத் தவறினால் இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்