Skip to main content

தொடரும் வேலை நிறுத்தம்; கோடிக்கணக்கான சரக்குகள் தேக்கம்

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

 struggle continues for 7th day, goods worth Rs 600 crore stuck in godown

 

ஈரோட்டில் உள்ள லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன்களில் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6 வருடங்களாகக் கூலி உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

இந்நிலையில், அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் சரக்கு லாரி புக்கிங் சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் தங்களது தரப்பு விளக்கத்தை அமைச்சரிடம் தெரிவித்தனர். இருதரப்பு விவரங்களையும் கேட்டறிந்த பிறகு, லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் தரப்பில் 6 பேரும், தொழிற்சங்க நிர்வாகிகள் 6 பேரும், பொது நபராக ஒரு வக்கீலும்  என 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், இந்தக் குழுவின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.  

 

எனினும், இன்று 7-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், எண்ணெய் வகைகள் அனுப்ப முடியாமல் குடோன்களில் தேங்கி இருக்கின்றன. கிட்டத்தட்ட ரூ.600 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கிக் கிடப்பதால் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் அவதி அடைந்துள்ளனர். பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழு இன்று மீண்டும் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பிரச்சனைக்கு சுமூகமான முடிவு ஏற்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்