கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகில் உள்ளது எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலையில் தினக்கூலி தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள்.
இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்கள், கோரிக்கை மனுக்கள், உண்ணாவிரதம் என தொடர்ந்து பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் அதைக் கண்டுகொள்ளாததால் கடந்த இரண்டு நாட்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக புவனகிரி சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் துரை சரவணன் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோன்று, தொழிலாளர்களுக்கு ஆதரவாக விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ‘கடந்த 2014ஆம் ஆண்டு சர்க்கரைத் துறை ஆணையர், அனைத்துத் துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை ஆலை நிர்வாகமே நிரப்பிக் கொள்ளலாம்.
மேலும் தினக் கூலி தொழிலாளர்களைக் கொண்டு நிரப்பவும் அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்தார். ஆனால், இதையெல்லாம் ஆலை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் தொழிலாளர்களை அலைகழித்து வருகிறார்கள்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் போராடும் தொழிலாளர்கள். அதேபோல், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கின்றனர்.