Skip to main content

தங்கை வீட்டிற்குச் சென்று திரும்பிய மகன்; வீட்டில் தாயின் செயலால் அதிர்ச்சி 

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

A son who returned to his sister's house; Shocked by mother's actions at home

 

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈரோடு கஸ்பாபேட்டை 3வது தெரு, போக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் வரதராஜ் (31). இவரது மனைவி குமுதா (26). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். வரதராஜ் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். வரதராஜ் குடும்பத்திற்குச் சொந்தமான சுமார் 1200 சதுர அடி காலி நிலம் குப்புசாமி வீதியில் உள்ளது. அந்த நிலம் சம்பந்தமாக வரதராஜுக்கும் அவரது உறவினருக்கும் பிரச்சனை ஏற்பட்டு அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் அந்த நிலத்தை பயன்படுத்த முடியாமல் இருந்தது. இதனால் வரதராஜ் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் கடனும் வாங்கி உள்ளார். வேலைக்கும் சரிவர செல்லாமல் இருந்துள்ளார். 

 

இந்நிலையில் நேற்று வரதராஜன் தனது மகளை அழைத்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தங்கை வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வரதராஜ் திடீரென தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வரதராஜ் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஈரோடு வீரப்பன்சத்திரம் சிதம்பரனார் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்(26). இவரது மனைவி கவுசல்யா (25). இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஈரோட்டிற்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சதீஷ் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் சதீசுக்கு குடிப்பழக்கமும் ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாகவே வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ் வீட்டில் திடீர் என தூக்கு போட்டுக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதீஷ் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை முத்துக்குமாரசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (83). அவரது கணவர் கண்ணையன் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மகள் திருமணம் ஆகி கோவையில் வசித்து வருகிறார். ராஜேஸ்வரிக்கு வயது முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேஸ்வரி மகன் கோவையில் உள்ள தனது தங்கை வீட்டிற்குச் சென்று வருவதாக ராஜேஸ்வரி இடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் அவர் வீடு திரும்பி வந்து பார்த்தபோது ராஜேஸ்வரி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்