சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள ஆலத்தூர் செட்டிப்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் பழனி என்கிற சின்னத்தம்பி. இவருடைய வீடு அருகே, வெள்ளிக்கிழமை (டிச. 25) மாலை, ஆண் குழந்தையின் இடுப்புக்கு கீழான பகுதி மட்டும் வெட்டித் துண்டமாகக் கிடப்பது தெரிய வந்தது. அந்த குழந்தை பிறந்து சில நாள்களே ஆகியிருக்கும் எனத் தெரிய வருகிறது. தலை மட்டும் துண்டிக்கப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உள்ளூர் மக்கள் இதுகுறித்து ஆலத்தூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர். அவர் அளித்த புகாரின்பேரில், தேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சங்ககிரி டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையில் காவல்துறையினர் கொல்லப்பட்ட குழந்தை யாருடையது, சடலத்தை வீசிச்சென்றது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். தோஷம் கழிப்பதற்காக ஆண் குழந்தையை நரபலி கொடுத்தனரா? அல்லது தவறான தொடர்பில் பிறந்த குழந்தையைக் கொன்று வீசினரா? தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சுற்றுவட்டார பகுதியில் யாருக்காவது புதிதாக குழந்தை பிறந்ததா? நிறைமாத கர்ப்பிணியாக இருந்தவர்கள் யார்? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. சுற்றுவட்டாரத்தில் முள்புதர் பகுதிகளில் குழந்தையின் தலை கிடக்கிறதா என்றும் காவல்துறையினருடன் சேர்ந்து கிராம மக்களும் தேடி வருகின்றனர். தலை வேறு, உடல் வேறாக பச்சிளம் குழந்தை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் ஆலத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.