![Relief to family of deceased kabaddi coach; Chief Minister's announcement](http://image.nakkheeran.in/cdn/farfuture/ELpXzJhs3eoQUTprbLUPMjsMiLJfCnE60p7bWdDkjEY/1676888724/sites/default/files/inline-images/01_85.jpg)
உயிரிழந்த கபடி பயிற்சியாளரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
குளித்தலை சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்கள் இடையேயான கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு சிறுவர்களை அழைத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள கரிச்சிகாரன்பட்டியைச் சேர்ந்த பயிற்சியாளர் மாணிக்கம் (வயது26) என்பவருக்கு சிறிது நெஞ்சுவலி இருந்துள்ளது. நெஞ்சு வலிப்பது தெரிந்தும் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவர் அய்யர்மலை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடந்து மேல்சிகிசைக்காக அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த பயிற்சியாளரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பயிற்சியாளர் உயிரிழந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களிடம் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனச் செய்தி வெளியாகியுள்ளது.