தண்ணீரின் தரம் குறித்து கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. அதோடு மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் இந்தக் கோடை நகரின் மையப் பகுதியில் நட்சத்திர ஏரியும் உள்ளது. இங்கு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஏரியில் குதுகலமாகப் படகு சவாரி செய்வார்கள். மேலும் நட்சத்திர ஏரியிலிருந்து நிரம்பி வெள்ளி நீர்வீழ்ச்சி கொட்டுகிறது. இந்த நிலையில் நட்சத்திர ஏரியில் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அடிக்கடி தண்ணீர் தரம் குறித்து ஆய்வு செய்வது வழக்கம்.
அதன்படி மேம்படுத்தப்பட்ட மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்ந்த இளநிலை சுற்றுச் சூழல் விஞ்ஞானி லட்சுமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நட்சத்திர ஏரியில் வாழும் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் தண்ணீரில் மாசு ஏற்பட்டுள்ளதா என ஆய்யு செய்தனர். மேலும், ஏரியின் தன்மை குறித்து சோதிக்க ஏரியின் பல்வேறு பகுதிகளில் பாட்டில்களில் தண்ணீரும் சேகரிக்கப்பட்டது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தண்ணீர் மதுரையிலுள்ள மேம்படுத்தப்பட்ட சுற்றுச் சூழல் ஆய்வுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு முடிவுகள் சென்னை தலைமை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என ஆய்வுக்கு வந்த இளநிலை சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.