Skip to main content

பெண் கொலை; கணவரின் தம்பி கைது!

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

perambalur district women farmer incident 

 

பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசாத்தி (வயது 35). இவர் அதே ஊரைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன மூன்று ஆண்டுகள் கழித்து முனியப்பன் இறந்துவிட்டதால், தனித்திருந்த ராசாத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இரண்டாவது கணவர் ராமகிருஷ்ணனும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

 

இதன் பிறகு வெங்கனூரிலேயே தங்கி தனியாக வசித்து வந்த ராசாத்தி தனக்கு சொந்தமான வயலில் விவசாயம் செய்து வந்தார். சம்பவத்தன்று, வயலில் வேலை செய்துவிட்டு மாலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது வழி மறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். விவசாயப் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் ராசாத்தி கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராசாத்தி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராசாத்தி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, ராசாத்தி அதே ஊரைச் சேர்ந்த நாகராஜன்  என்பவரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், அந்தப் பணத்தை நாகராஜன் திருப்பிக் கேட்டபோது,  தான் கடன் வாங்கவே இல்லை என்று ராசாத்தி கூறியதாகவும் சொல்லப்பட்டது .

 

இதனால் நாகராஜனை சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்து விசாரணை செய்து வந்த நிலையில், அவர் தான் கொலை செய்தார் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், இந்த விசாரணையில், நாகராஜன் ராசாத்தியின் முதல் கணவரான முனியப்பனின் உடன் பிறந்த தம்பி என்பது தெரிய வந்துள்ளது. அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், "எனது சகோதரர் முனியப்பனை ராசாத்தி திருமணம் செய்து சில மாதங்களில் எனது அண்ணன் இறந்துபோனார். மீண்டும் ராசாத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்தார். அவரும் சில ஆண்டுகளில் இறந்துபோனார். அதன் காரணமாக ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது ஜீவனாம்சம் கேட்டு ராசாத்தி வழக்குத் தொடர்ந்தார்.

 

perambalur district women farmer incident 

 

அந்த வழக்குச் செலவிற்காக சுமார் ஒன்றரை லட்சம் வரை ராசாத்திக்கு பணம் கொடுத்துள்ளேன். அவருக்கு ஜீவனாம்சமாக சுமார் 10 லட்ச ரூபாய் பணம் கிடைத்தது. அதன்பிறகு நான் கொடுத்த ஒன்றரை லட்சம் பணத்தை திருப்பித் தருமாறு ராசாத்தியை பலமுறை கேட்டுப் பார்த்தும் அவர் எனக்கு பணம் தராமல் ஏமாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் நிலத்தில் வேலை செய்துவிட்டு வரும்போது எதிரில் பார்த்த நான் பணம் தருமாறு கேட்டேன். அப்போதும் அவர் தரமறுத்துப் பேசினார். இதனால் கோபம் அடைந்த நான் கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தேன். எனக்குச் சேரவேண்டிய பணத்தை தர மறுத்ததால் கோபத்தின் காரணமாக ராசாத்தியை கொலை செய்தேன்" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.