![passed away of DMK executive in Dindigul](http://image.nakkheeran.in/cdn/farfuture/i_bfY0QZTt4vkyqXQ_RXxX8XpGYuHFRcoq3qIhYs1NY/1716526961/sites/default/files/inline-images/Untitled-20_10.jpg)
திண்டுக்கல் நகர் பகுதியில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களால் மீண்டும் கொலை நகரம் ஆகிறதா திண்டுக்கல் எனப் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் அடியனுத்து பஞ்சாயத்திற்குட்பட்ட யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப் (வயது 60). திமுக பிரமுகரான இவரின் மனைவி அடியனூத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். மாயாண்டி ஜோசப் யாகப்பன்பட்டியில் பல ஆண்டுகளாக பார் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு பாரில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாயாண்டி ஜோசப்பை எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் திடீரென வழிமறித்தது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாயாண்டி ஜோசப்பை அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாயாண்டி ஜோசப்பின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
அதேபோல் இந்தச் சம்பவம் நடந்த 2 மணிநேரத்தில் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நீலகண்டன் என்பவரை அவரது மகன் விஸ்வநாத் கொடூரமாக கத்தியால் குத்தியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிழே சரிந்தார். பின்பு அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 மணி நேரத்தில் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் கொடூர கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவம் நடந்திருப்பது திண்டுக்கல் மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.