Skip to main content

“எந்த சாதி, மதத்தைச் சேர்ந்தவராயினும் உடன்பிறப்பென்ற உணர்வு வேண்டும்” - தொல். திருமாவளவன்

Published on 27/11/2022 | Edited on 27/11/2022

 

"No matter what caste and religion you are born in, you and I should feel that we are born together" Thol. Thirumavalavan

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமத்துவம் உள்ள சமூகமாக இருக்க வேண்டுமானால் பிறப்பின் அடிப்படையில் கல்வி, வேலை, அதிகாரம் போன்றவை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். இந்தக் கோட்பாடுதான் சமூக நீதிக் கோட்பாடு என சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் பேசினார்.

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் டாக்டர். அம்பேத்கர் இருக்கை சார்பில் இந்திய அரசியலமைப்பு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் பேசினார். அவர் கூறுகையில், “இந்திய அரசியலமைப்பு தினத்தை அறிவார்ந்த சான்றோர், மாணவச் செல்வங்கள், ஜனநாயக சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் போற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  மேலும் இந்த நாளை மையமாக வைத்து பல்வேறு போட்டிகளை நடத்தி மாணவச் செல்வங்களுக்கு பரிசுகளை வழங்குகிற அளவுக்கு இது நினைவு கூறப்படுகிறது.

 

ஒரு புதிய இந்தியாவை கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த பரிணாம வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது இந்திய அரசமைப்புச் சட்டம்தான். ஆகவே இந்த அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நாள் என்பது ஒரு பொன்னான நாள் ஆகும். புரட்சியாளர் அம்பேத்கர் அரசியல் சாசன உறுப்பினராக தேர்வு பெற்று அரசியல் நிர்ணய சபைக்குப் போகிறார்.  அதன் பிறகு அந்த நிர்ணய சபையின் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத் அரசமைப்பு சட்ட வரைவுக்குழு தலைவராக அம்பேத்கரை தேர்வு செய்கிறார்.

 

நாட்டை வழி நடத்துவதற்குரிய கோட்பாட்டைக் கொண்டதாக இந்த அரசியல் அமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  பல்வேறு கலாச்சாரத்தை பின்பற்றக்கூடிய மக்கள் வாழும் நாடு. பல்வேறு வகையான வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்கள், பல்வேறு வகையான கருத்தியலை ஏற்றுக்கொண்டு செயல்படக் கூடியவர்கள், இவர்கள் அனைவரையும் உடன் பிறப்பு உணர்வோடு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு இருக்கிறது.  

 

எந்த சாதியில் பிறந்தாலும், எந்த மதங்களைப் பின்பற்றினாலும் நீயும் நானும் உடன்பிறப்புதான் என்கிற உணர்வு நமக்குள் வரவேண்டும். எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அந்த அடிப்படை கோட்பாடு, அடிப்படை கூறுகள் என்பது சிதைந்து போகக்கூடாது என்பதுதான் சட்டத்தை எழுதிய அம்பேத்கரின் நோக்கம் என்பதை நாம் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும். சமத்துவம் உள்ள சமூகமாக இருக்க வேண்டுமானால் பிறப்பின் அடிப்படையில் கல்வி, வேலை,அதிகாரம் யாவும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்கிற கோட்பாடுதான் சமூகநீதி கோட்பாடு” எனப் பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ,  பல்கலைக்கழக பதிவாளர் சீத்தாராமன், எஸ்.ஆர்.எம் சட்ட பள்ளி பேராசிரியர் வின்சன் காம்ராஜ், இந்திய மொழிப்புல முதல்வர் முத்து ராமன் ஆகியோர் அரசியலமைப்பு சட்டம் பற்றி பேசினர். 

 

முன்னதாக அரசியல் அமைப்பு தினத்தையொட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இதனையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது. பேராசிரியர் சௌந்தரராஜன் நன்றி கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்