தமிழ்நாட்டு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு, இன்று காலை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று இருவரது நினைவிடங்களிலும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளைக் கொண்டாடும் பொருட்டு திமுக நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தொண்டர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளையும் பெற்றார். மேலும், இங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஐயா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்து அவரது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.