நாளை (நவம்பர் 11 ஆம் தேதி) திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே இருக்கக்கூடிய காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். காந்திகிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வது மட்டுமல்லாது திண்டுக்கல்லில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்படும் கட்சி விழா ஒன்றிலும் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து திண்டுக்கல் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம், விமான நிலையத்தின் உள் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தின் வெளி வளாகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.