Skip to main content

“தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” - அமைச்சர் மதிவேந்தன்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Minister Mathiventhan said All election promises will be fulfilled

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் கே.இ.பிரகாஷ் தொகுதி முழுவதும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓசுவக்காடு, குட்டிக்கிணத்தூர், ஆயிக்கவுண்டன்பாளையம், மஞ்சுபாளையம், கொல்லப்பட்டி, மக்கிரிபாளையம் மற்றும் திருச்செங்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட வால்ராசம்பாளையம், அங்காளம்மன் கோவில், அண்ணாசிலை, புள்ளிக்கவுண்டன்பாளையம், அண்ணாநகர், உப்புபாளையம், கல்லுகட்டுயூர், பச்சாம்பாளையம், அல்லிநாயக்கன்பாளையம், அண்ணாநகர், நத்தமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக குமாரபாளையத்தில் வேட்பாளர் கே.இ.பிரகாஷ்க்கு ஆதரவாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கான இலவச பஸ் பயணம், பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம், கல்லூரி மாணவர்களுக்காக உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சட்மன்ற தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது போல வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக அளிக்கப்பட்டுள்ள திட்டங்களும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேற்றப்படும்.

சேது சமுத்திர திட்டம், புதிய கல்விக் கொள்கை ரத்து, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிர் இடஒதுக்கீடு 33 சதவீத உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும். இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் ஒன்றிய அரசால் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும். தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் நியமனத்தை, இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே மேற்கொள்ளும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு ஜிபி அளவில் கட்டணமற்ற இலவச சிம் கார்டு வழங்கப்படும். மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தை சார்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும். மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இலவச வைபை சேவை வழங்கப்படும். பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும், கேஸ் ரூ.500க்கும் வழங்கப்படும். பாஜ அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்” என்றார். பிரசாரத்தின் போது திமுக ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.